அதிக சுயாட்சி கேட்கிறார் பிரபாகரன் .. நார்வே தூதர்
டெல்லி:
இலங்கையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அதிக சுயாட்சி வழங்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் விரும்புவதாகஅவரை காட்டுக்குள் சென்று சந்தித்த, நார்வே தூதுக் குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் டெல்லியில் புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது தொடர்பாக பிரபாகரனை காட்டுக்குச் சென்று நவம்பர் 1-ம் தேதி சந்தித்தோம். என்னிடம் அவர்பேசுகையில், தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடகிழக்கு மாகாணங்களில் அதிக சுயாட்சி வழங்க வேண்டும் என்பதையே அதிகம் வலியுறுத்தினார்.இருப்பினம் தீர்வு குறித்து அவர் ஏதும் தெரிவிக்கவில்லை.
இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இப்பிரச்சனைக்குவெகு எளிதில் தீர்வு கண்டு விட முடியாது. இது மிகவும் சிக்கலான விஷயம்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டுமானால், இலங்கை ராணுவம் யாழப்பாணத்திலிருந்து வாபஸ் பெற வேண்டும் என்று விடுதலைப் புலிகள்நிபந்தனை விதிக்கிறார்கள். நிபந்தனையை இலங்கை அரசு ஏற்றுக் கொண்டால் தான் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்க முடியும். ஆனால் இலங்கைஅரசோ, அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் தான் ராணுவ வீரர்களை வாபஸ் பெற முடியும் என்று கூறி விட்டது.
சர்வதேச அளவில் அனைத்து நாடுகளும் இலங்கைப் பிரச்சனைக்கு சுமுகமான தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறது என்று பிரபாகரனிடம்கூறினேன். மேலும் தனி ஈழம் கொடுத்தால் தான் பிரச்சினை தீரும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்றும் அவரிடம் தெரிவித்தேன் என்றார்.
முன்னதாக, நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் மற்றும் நார்வே பொதுச் செயலாளர் ரோமன்ட் ஜோன்சன் ஆகியோர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் பிரபாகரனிடம் நடத்திய பேச்சு வார்த்தை குறித்துத் தெரிவித்தனர்.
நார்வே தூதுக்குழுவினர் மீண்டும் இலங்கை சென்று விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாரகரன் மற்றும் இலங்கை அரசுடன் பேச்சு வார்த்தைநடத்தவுள்ளதாகவும் தெரிகிறது. அவர்கள் எப்போது செல்வார்கள் என்பது குறித்த விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஐ.ஏ.என்.எஸ்.