புலிகளுடன் பேச இலங்கைக்கு இங்கிலாந்து யோசனை
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், விடுதலைப் புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று இலங்கை அரசை இங்கிலாந்து வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் பீட்டர் ஹெய்ன் தலைநகர் கொழும்பில் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை இனப்பிரச்சனை கடந்த 17 வருடங்களாகத் தீர்க்கப்படாமல் இருக்கிறது. இந்தப் பிரச்சனையால் ஏராளமான ராணுவ வீரர்களும், விடுதலைப்புலிகளும் பலியாகி வருகிறார்கள்.
இந்தப் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டியது இலங்கை அரசு மற்றும் புலிகளின் பொறுப்பாகும். சமரசப் பேச்சுவார்த்தை மட்டுமே இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும்.
அதுதவிர, தனி ஈழம் வேண்டும் என்ற தனது பிடிவாத நிலையிலிருந்து விடுதலைப் புலிகள் சிறிது தளர்ந்து வர வேண்டும். இலங்கை அரசு மற்றும் புலிகள்தலைவர் ஆகிய இரு தரப்பினரையும், நார்வே தூதுக்குழுவின் உதவியுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முன்வாருங்கள் என்று கூறியுள்ளோம்.
புலிகளுடன் நார்வே பேச்சு:
நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம், கடந்த நவம்பர் 1 ம் தேதி, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைச் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தைகுறித்து ஆலோசனை நடத்தினார்.
மேலும் இலங்கை இனப்பிரச்சனைக்கு விரைவில் சுமூகத் தீர்வு காண வேண்டும் என்று இந்தியாவும், அமெரிக்காவும் கடந்த சில மாதங்களாகவலியுறுத்தி வருகின்றன.
தனி ஈழம் வேண்டும் என்ற தங்களது கொள்கைகளில் விடுதலைப் புலிகள் பிடிவாதத்தைத் தளர்த்திக் கொள்ள மாட்டார்கள். இருப்பினும் அவர்களதுபிடிவாதத்திலிருந்து அவர்களை மாற்ற முடியும் என்று இங்கிலாந்து உறுதியாக நம்புகிறது.
இலங்கை பிரதமர் ரத்ன ஸ்ரீவிக்ரமநாயகே, வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரனில்விக்ரமசிங்கேயுடன் இது குறித்துப் பேசினேன். அவர்கள் கூறுகையில், தற்போது புலிகள் மாவீரர்கள் வாரம் கொண்டாடுகிறார்கள்.
இறுதி நாள் விழாவில், உரையாற்றும் பிரபாகரன் இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் பேசுவார் என்று நம்புவதாகக் கருத்துத்தெரிவித்தார்கள்.
மேலும் இலங்கையில் வடகிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்கள் கூட தங்களுக்கு தனி ஈழம் வேண்டும் என்று விரும்பவில்லை. அவர்கள் தங்களுக்குநல்ல ஒரு வேலை மற்றும் தங்களது வியாபாரங்கள் அமோகமாக எந்த வித பிரச்சனையும் இன்றி அமைதியாக நடக்க வேண்டும் என்றுவிரும்புகிறார்கள் என்றார் பீட்டர் ஹெய்ன்.
ஐ.ஏ.என்.எஸ்.