ஊழல் தடுப்புச் சட்டப்படி அசார், அஜய் சர்மா மீது வழக்கு?
டெல்லி:
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாரூதின் மற்றும் கிரிக்கெட் வீரர் அஜய் சர்மா மீது சிபிஐ வழக்குத் தொடரசாத்தியக் கூறுகள் உள்ளன என்று நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டுத் துறை இணை அமைச்சர் ராதாகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மனோஜ் பிரபாகர், நயன் மோங்கியா, அஜய் ஜடேஜா, முகமது அசாரூதின், அஜய் சர்மா ஆகியோருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்பிருக்கிறதுஎன்று சிபிஐ கண்டுபிடித்துக் கூறியது.
இவர்களில் அசாரூதினும், அஜய் சர்மாவும் அரசு ஊழியர்கள். இதனால் இவர்கள் மீது சிபிஐ ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர வாய்ப்புள்ளது.இதுகுறித்து, உள்துறை அமைச்சகத்தின் பதிலுக்காக மத்திய அரசு காத்திருக்கிறது.
மேலும் அசாரூதின் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணிபுரிகிறார். அஜய் சர்மா மத்திய உணவுக் கழகத்தில் பணிபுரிகிறார். இதனால் இவர்கள் மீது 1988ம் வருட ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரும் வாய்ப்பு அதிகமுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்காக எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் , முன்னாள் பிரதமர் நரசிம்மராவ், முன்னாள்அமைச்சர் பூடாசிங் ஆகியோருக்கு, இதே சட்டத்தின் கீழ்தான், டெல்லி சுப்ரீம் கோர்ட் 3 வருட கடுங்காவல் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்ததுகுறிப்பிடத்தக்கது.
இதை எதிர்த்து இருவரும் மேல்முறையீடு செய்ததையடுத்து தண்டனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியக் கிரிக்கெட் அணியில் இருந்த அசாரூதின், அஜய் ஜடேஜா, அஜய் சர்மா, நயன் மோங்கியா, மனோஜ்பிரபாகர் ஆகியோருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் பங்குள்ளது.
இவர்கள் தவிர 10 வெளிநாட்டு கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் சூதாட்டத்தில் தொடர்பிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் குற்றம்சாட்டப்பட்ட வீரர்கள் அனைவரும் தங்கள் மேல் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்று மறுத்து வருகிறார்கள்.
ஐ.ஏ.என்.ஐ.












Click it and Unblock the Notifications