சமரசம் ஏற்பட உதவுங்கள் .. இலங்கை அமைச்சர் கோரிக்கை
டெல்லி:
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண, இந்தியா உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று இலங்கை தொழில் வளர்ச்சி அமைச்சர் பெரிஸ் ஞாயிற்றுக்கிழமைதெரிவித்தார்.
இந்தியா- இலங்கை வர்த்தக மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டெல்லி வந்துள்ள அமைச்சர் பெரிஸ் நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண, இந்திய அரசு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறது. நார்வே தூதுக் குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம், விடுதலைப் புலிகள்தலைவர் பிரபாகரனைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதற்குப்பின் சமரச முயற்சியில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
பிரபாகரனுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை குறித்த விவரங்கள் அனைத்தும் இந்திய அரசுக்கு விலாவாரியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு இந்திய அரசின் உதவி கண்டிப்பாகத் தேவை.
இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் வாழும் தமிழர்களுக்கு உதவி செய்ய அதிபர் சந்திரிகா அதிக ஆர்வத்தில் இருக்கிறார்.
தமிழர்களுக்கு அதிக அதிகாரம் வழங்கும் திட்டம் விரைவில் அமுலாகும். அவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் சுயாட்சி வழங்கப்படும் என்றார்பெரிஸ்.