அமலுக்கு வருகிறது காஷ்மீர் சண்டை நிறுத்தம்
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை முதல் சண்டை நிறுத்தம் அமலுக்கு வருகிறது.
ரம்ஜான் மாதத்தையொட்டி காஷ்மீரில் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என்று பிரதமர் வாஜ்பாய் அறிவித்திருந்தார். ஆனால் இதைதீவிரவாதிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில், ரம்ஜான் மாதம் செவ்வாய்க்கிழமை தொடங்குகிறது. இதையடுத்து சண்டை நிறுத்தமும்செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று ராணுவம் ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தது.
சண்டை நிறுத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்., மற்றும் சில அமைப்புக்கள் பிரதமர் வாஜ்பாய்க்கு அறிவுறுத்தினர். ஆனால் சண்டைநிறுத்தம் வாபஸ் ஆகாது என்று பிரதமர் வாஜ்பாய் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டார்.
இதற்கிடையே, சண்டை நிறுத்தம் அமலுக்கு வருவதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அத்வானியை சந்திப்பதற்காக, காஷ்மீர் முதல்வர் பரூக்அப்துல்லா டெல்லி வந்திருந்தார்.
சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ரம்ஜான் மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ள சண்டை நிறுத்தம் வெற்றி பெற்றால் அது தொடர்ந்துநீடிக்கப்படும். சண்டை நிறுத்தம் வெற்றி பெறும் என நம்புகிறேன். சண்டை நிறுத்தத்தை மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்.
சண்டை நிறுத்தம் மூலமாக காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று இந்தியாஒரு போதும் கூறவில்லை. பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால் எல்லைப்பகுதியில் தீவிரவாதத்தை நிறுத்த வேண்டும் என்று தான் இந்தியா கூறிவருகிறது என்றார் பரூக்.
எல்லைப் பகுதியிலுள்ள சோதனை சாவடியில் பார்வையாளர்கள் அரங்கைத் திறந்து வைத்து மத்திய அமைச்சர் அத்வானி பேசுகையில், இந்தியா அறிவித்துள்ளசண்டை நிறுத்தத்தை பாகிஸ்தான் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் காஷ்மீர் மாநிலத்தில் அமைதி ஏற்படுத்தி எல்லையில் தீவிரவாதத்தைநிறுத்த முயற்சிகள் மேற் கொள்ள வேண்டும். காஷ்மீர் மாநிலத்தில் நட்புறவும், நல்லெண்ணமும் மலரச் செய்ய வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications