இந்தியன் வங்கி ஊழல்: குற்றப்பத்திரிகை தாக்கல்
சென்னை:
இந்தியன் வங்கி ஊழல் வழக்கில் முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் உட்பட பத்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்தமாதம் 11-ம் தேதி அவர்கள் ஆஜர் ஆக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பையைச்சேர்ந்த ஈஸ்ட் வெஸ்ட் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு 1994-ம் வருடம் முதல், 1996-ம் வருடம் வரை இந்தியன் வங்கி சார்பில் கடன்வழங்கப்பட்டது. இதில் விதிமுறைகளை மீறி பல சலுகைகள் வழங்கப்பட்டதாகவும் இதனால் 170.13 கோடி ரூபாய்க்கு மேல் இழப்புஏற்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
சி.பி.ஐ. இதை விசாரித்து 1997-ம் வருடம் வழக்குப்பதிவு செய்தது.
மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு இப்பொழுது இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சி.பி.ஐ.வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியன் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சிதம்பரம் உள்பட பத்து பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
கூட்டு சதி, மோசடி, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் இதில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். குற்றம் சாட்டப்பட்டஅனைவரும் டிசம்பர் 11-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆக வேண்டும் என்று நீதிபதி உத்திரவிட்டார்.