ஜெ. வழக்குகளை விரைவில் முடிக்க சொல்லி ஆர்.எம்.வீ. போராட்டம்
சென்னை:
ஜெயலலிதா மீதான அன்னியச் செலாவணி மோசடி வழக்கை வேகமாக முடிக்க வேண்டும் என நீதிமன்றத்தை வலியுறுத்துவோம் என்று எம்.ஜி.ஆர்கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது தொடரப்பட்டுள்ள அன்னியச் செலாவணி வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்பதற்காக எம்.ஜி.ஆர்கழகம் சென்னை சாஸ்திரி பவன் முன்பு திங்கள் கிழமை காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆர்.எம்.வீரப்பன் மற்றும் பொதுச் செயலாளர் ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது ஆர்.எம். வீரப்பன் பேசுகையில், ஜெயலலிதா, சசிகலா, தினகரன் ஆகியோர் மீது 20-க்கும் அதிகமான அன்னியச் செலாவணி வருமான வரிதொடர்பான வழக்குள் உள்ளன.
கடந்த 98-ம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் நிதி மற்றும் சட்டத் துறையில் பதவி பெற்று அதன் மூலம் இந்த வழக்குகளை நடத்திய அரசுவக்கீல்களை மாற்றி அ.தி.மு.க. வக்கில்களை நியமித்தனர். இதற்கு பிறகு இந்த வழக்குள் நடத்தப்படாமல் இருக்கின்றன.
அன்னியச் செலாவணி விதிகளை மீறியதற்காக ரூ 28 கோடி கட்ட வேண்டும் என தினகரனுக்கு ஃபெரா போர்டு உத்தரவு பிறப்பித்தது. இந்த பணமும் 45நாட்களுக்குள் கட்டப்பட வேண்டும். ஆனால் தினகரன் அந்தப் பணத்தை இன்னும் கட்டவில்லை.
அன்னியச் செலாவணி வழக்கில் ஒரு வாரம் சிறைத் தண்டனை பெற்றாலும் தேர்தலில் போட்டியிட முடியாது. அதனாலேயே இந்த வழக்குகளில் காலம்கடத்தி வருகின்றனர்.
நாங்கள் நீதிமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடுவதாக வழக்கு போட்டுள்ளனர். இதன் மூலம் எங்கள் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது.
நீதிமன்றத்தின் அதிகாரத்தில் தலையிடுவதற்காக இந்த போராட்டத்தை நாங்கள் நடத்தவில்லை. எந்த விதமான நடவடிக்கையும் இருக்கும் மத்திய அரசைகண்டித்துதான் இந்த போராட்டம் என கூறினார்.