நுழைவுத் தேர்வு எழுதிய ராஜீவ் கொலைக் கைதிகள்
வேலூர்:
வேலூர் மத்திய சிறையில் பட்டப்படிப்பு படிப்பதற்காக ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 2 ஆயுள்கைதிகள் உள்பட 52 பேர் நுழைவுத் தேர்வு எழுதினர்.
வேலூர் மத்திய சிறையில் உள்ள கைதிகள் பட்டப்படிப்பு படிப்பதற்காக நெல்லை மனோன்மணியம்பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்து இருந்தது. இதில் பல கைதிகள் விண்ணப்பம் போட்டு இருந்தனர்.
இந்த நிலையில் வியாழக்கிழமை வேலூர் சிறையில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பிற்கான நுழைவுத்தேர்வு சிறை வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நுழைவுத் தேர்வில் மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற ராபர்ட்பயார்ஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் எம்.ஏ.பட்டப்படிப்பிற்கான நுழைவு தேர்வு எழுதினர்.
இந்தத் தேர்வு 2 கட்டமாக நடந்தது. முதல் கட்டமாக காலை 9 மணி முதல் 11 மணி வரை தேர்வு நடந்தது.தொடர்ந்து பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையும் நடந்தது. இதில் 52 கைதிகள் நுழைவுத் தேர்வு எழுதியுள்ளனர்.