ஜம்மு-காஷ்மீரை 3 ஆக பிரிக்கக் கோரிக்கை
லே:
ஜம்மு-காஷ்மீரை, ஜம்மூ, காஷ்மீர், லடாக் என மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என லடாக் பகுதியில் இருக்கும் அரசியல் கட்சிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு, காஷ்மீர், லடாக் என 3 பகுதிகளாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.லடாக் பகுதியில் இருக்கும் அரசியல் கட்சிகள் பாரபட்சமின்றி இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
லடாக் தன்னாட்சி மலைப் பகுதி மேம்பாட்டு கவுன்சில் உறுப்பினர் ரிச்சின் கோரா கூறியதாவது:
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் மூன்றாக பிரிக்கப்பட்டால் மட்டுமே காஷ்மீர் பிரசச்னைக்கு தீர்வு காணப்பட முடியும். காஷ்மீர் அரசியல்வாதிகள் போல்நாங்கள் சுயாட்சி கேட்கவில்லை. யூனியன் பிரதேச அந்தஸ்து கொடுக்கப்பட்டால் போதும் என கூறினார்.
ஜம்மு - காஷ்மீரில் வாழ்ந்து வரும் ஹிந்து பண்டிட்டுகளும் இதை ஆதரித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு ஆளும் கட்சி துவக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த கோரிக்கை குறித்து மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரும்காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா கூறியதாவது:
காஷ்மீரில் ஹிந்துக்களும் முஸ்லீம்களும் சேர்ந்து வாழ முடியாத படியான சூழ்நிலை எதுவும் இல்லை. மதத்தை காரணம் காட்டி காஷ்மீரை பிரிப்பது முகமது அலிஜின்னாவின் பிரிவினை வாதத்தை ஆதரிப்பது போலாகிவிடும் என்றார்.












Click it and Unblock the Notifications