ஊட்டியில் கொட்டுகிறது பனி மழை
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடுங்குளிருடன் உறைபனி மழை பெய்து வருகிறது.
மலைகளின் ராணி என்றழைக்கப்படும் ஊட்டிக்கு சீசனை அனுபவிப்பதற்காக சுற்றுலா பயணிகள் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் வருகைதருவார்கள்.
குளிர்கால சீசனை அனுபவிப்பதற்காக செப்டம்பர், நவம்பர், டிசம்பர் மாதங்களிலும் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.
கொட்டும் உறைபனி:
ஆனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு ஊட்டியில் கடுங்குளிர் நிலவுகிறது. மேலும் உறைபனி கொட்டுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரைகடும் வெயில் அடிக்கிறது. ஆனால் மாலை 6 மணி முதல் லேசான பனி பெய்ய ஆரம்பிக்கிறது.
பனிமழையில் கை, கால்களில் எரிச்சல் ஏற்படுகிறது. இதனால் இரவு 8 மணிக்கு மேல் கடைக்காரர்கள் கடைகளைப் பூட்டி விடுகிறார்கள்.பொதுமக்களும் வீட்டை விட்டு வெளியே வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
காலையில் 6 மணிக்கெல்லாம் உறைபனி ரோடு, புல்வெளி, வீட்டுக் கூரைகள் மேல் படர்ந்து கிடக்கின்றன. கடுங்குளிருடன் உறைபனி கொட்டுவதால்வாகனங்களிலும், டீசல் டாங்குகளிலும் உள்ள டீசல் உறைந்து பனிக்கட்டி போல் காட்சியளிக்கிறது.
மேலும், கடுமையான உறைபனி பெய்து வருவதால் தேயிலைகள், நாற்றுக்கள் மற்றும் முட்டைக்கோஸ் செடிகள் கருகி விடுகின்றன. தேயிலை விலைவீழ்ச்சியினால் பாதிக்கப்பட்டு வரும் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.