சூடு பிடிக்கிறது நிலக்கரி ஊழல் வழக்கு
சென்னை:
தமிழ்நாடு மின்வாரியத்திற்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தரம் குறைந்து காணப்பட்டதால் அதற்கு ரூ 15 கோடி சுங்க வரிவிதித்தேன் என்று 2 வது தனிநீதிமன்றத்தில் அரசுத் தரப்பு சாட்சி கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 10 பேர் மீது நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு நீதிபதி தார்வேஸ்முன்னிலையில் 2 வது தனிநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியங்களை ஒரு மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று தார்வேஸ் உத்தரவிட்டிருந்தார்.
இதை எதிர்த்து ஜெயலலிதா தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்றம் இந்த மனுவை விசாரித்து,நீதிபதி தார்வேஸ் உத்தரவில் தவறேதுமில்லை எனத் தீர்ப்பளித்தது.
இதையடுத்து நிலக்கரி ஊழல் வழக்கில் சாட்சிகள் விசாரணை தனிநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடந்தது. ஓய்வு பெற்ற சுங்க அதிகாரி கோவிந்தராஜன்என்பவர் சாட்சியம் அளித்தார்.
அவர் தனது சாட்சியத்தில், கடந்த 93 ம் வருடம் இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து தமிழக மின்வாரியத்திற்கு நிலக்கரி இறக்குமதிசெய்யப்பட்டது. அப்போது இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி தரம் இல்லாததாக இருந்தால் அதற்கு விதிக்கப்படும் தீர்வையில் சலுகை விதிக்கலாம்என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
தமிழகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியின் தரம் குறைந்து காணப்பட்டதால் அதற்கு வழக்கமாக விதிக்கும் தீர்வையை விதித்தேன். அதன்படிரூ 15 கோடி வரி விதித்தேன் என்று சாட்சியம் அளித்தார். இவரது சாட்சியத்துக்கு செவ்வாய்க்கிழமை குறுக்கு விசாரணை நடக்கிறது.