கழிவுப் பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரிக்கை
கோவை:
கழிவுப் பஞ்சு மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என கழிவுப் பஞ்சு நூற்பாலை சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து கழிவுப் பஞ்சு நூற்பாலை சங்கத்தின் பொதுச் செயலர் ரமேஷ்குமார் திப்ரிவால் கூறியதாவது:
கழிவுப் பஞ்சு நூற்பாலைகள் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. கடந்த சில நாட்களில் கழிவுப் பஞ்சின் விலை ரூ. 30 லிருந்து ரூ. 42 ஆக உயர்ந்துள்ளது. இந்தகடும் விலை உயர்வினால் கழிவுப் பஞ்சாலை நலிவடைந்து வருகிறது. தமிழகத்தில் 208 கழிவுப் பஞ்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளால் 80ஆயிரம் பேர் நேரடியாக வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
வெளிநாட்டில் கழிவுப் பஞ்சின் விலை மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால், இதற்கு இறக்குமதி வரி விதிக்கப்படுவதால் விலை உயர்ந்துள்ளது.எப்போதும் நல்ல பஞ்சிற்கு இறக்குமதி வரி குறைக்கப்படும் போது கழிவுப் பஞ்சிற்கும் சேர்த்தே வரி குறைப்பு இருக்கும்.
ஆனால், இந்த வரிக் குறைப்பு தற்போது இல்லை. எனவே, இறக்குமதி வரியும் அதிகமாக உள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு கழிவுப் பஞ்சுஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த கழிவுப் பஞ்சு ஏற்றுமதியைத் தடை செய்ய வேண்டும். இறக்குமதி வரி 35 சதவீதத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.