குமரியில் 1000 மீனவர்களைக் காணவில்லை
நாகர்கோவில்:
தமிழகத்தில் புயலின்போது கடலில் மீன்பிடிக்கச் சென்ற 1000 க்கும் மேற்பட்ட மீனவர்களை காணவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல் மன்னார் வளைகுடாவை நெருங்கியதைத் தொடர்ந்து தென் தமிழகத்தின் பல பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.
பாம்பன், ராமேஸ்வரம், தூத்துக்குடி ஆகிய இடங்களில் புதன்கிழமை அபாய எச்சரிக்கைக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன. நாகப்பட்டினம், கடலூர்,புதுச்சேரி, குளச்சல் ஆகிய பகுதிகளிலும் அபாய எச்சரிக்கைக் கொடிகள் ஏற்றப்பட்டிருந்தன.
இதற்கிடையே குமரி மாவட்டத்திலிருந்து 400 படகுகளில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். 400 படகுகளில் 200 படகுகள் கரைதிரும்பிவிட்டன. மீதி 200 படகுகளில் சென்ற 1000 க்கும் மேற்பட்டோரின் நிலை என்ன ஆனது என்று தெரியவில்லை.
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், கள்ளிவயல் தோட்டம், புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்கள்விசைப்படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்றும் தெரியவில்லை.
கோடியக்கரை மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 படகுகள் ராட்சத கடல் அலைகளால் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டன.
வேதாரண்யத்திலிருந்து நாகப்பட்டினத்திற்கு சென்ற அரசு பஸ் மீது மின்சாரக் கம்பம் முறிந்து விழுந்தது. அப்போது மின் விநியோகம் இல்லாததால் பஸ்சில்பயணம் செய்த பயணிகளுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.
ராமேஸ்வரத்தில் கன மழை:
புயல் காரணமாக ராமேஸ்வரத்தில் கன மழை பெய்தது. கடலோரப் பகுதியில் குடிசைகள் நீரில் மூழ்கின. கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது. பாம்பன்ரயில் பாலத்தைத் தொடும் அளவுக்கு அலை உயர்ந்தது.
தனுஷ்கோடி, முகுந்தராயன்சத்திரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் 150 அடி தூரத்துக்கு கடல் தண்ணீர் ஊருக்குள் வந்தது. இதனால் கடலோரப் பகுதிகளில்இருந்த மீனவர்களின் குடிசைகள் நீரில் மூழ்கின.
கடலோரப் பகுதிகளில் வசித்தவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலர் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வேர்கோடு பகுதியில் 200 குடும்பத்தைச் சேர்ந்த 900 பேர் கிறிஸ்தவ ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தனுஷ்கோடியில் பலத்த காற்று காரணமாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதம் அடைந்தன. மேலும்100 நாட்டு படகுகள் தண்ணீரில் மூழ்கின.
ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தங்கள் படகுகளை காற்று மிக லேசாக வீசும் குடா பகுதியில் கொண்டு விட சென்றனர். அவர்கள் பாம்பன் ரயில்பாலத்தைத் தாண்டித்தான் குடா பகுதிக்குச் செல்ல முடியும். பாம்பன் ரயில் பாலம் மூடப்பட்டிருந்ததால் மீனவர்களால் அங்கு செல்ல முடியவில்லை. இதையடுத்துபாலத்தைத் திறந்து விடக் கோரி அவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்குப்பின் ரயில் பாலம் திறந்து விடப்பட்டது.
உச்சிப்புளி, புதுமடம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. தருவாவலசை, பெருங்குளம், இருமேனி ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளைகாலி செய்து விட்டு புயல் காப்பகத்தில் தங்கி உள்ளனர்.












Click it and Unblock the Notifications