முடிவெடுங்கள் .. மூப்பனாருக்கு ப.சிதம்பரம் கோரிக்கை
சென்னை:
தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பதை கட்சித் தலைவர் மூப்பனார்தாமதமின்றி உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னையில் புதன்கிழமை நடந்த த.மா.கா. பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:
இக்கட்டான நிலையில் பிறந்தது நம் கட்சி. இப்போது தமிழகத்தின் முக்கியக் கட்சிகளில் ஒன்று. மக்கள் நம்மைஅங்கீகரித்து, பல பதவிகளை நமக்குக் கொடுத்துள்ளார்கள்.
எல்லாக் கட்சிகளுக்கும் இருக்கும் ஆசையைப் போல, தமிழ் மாநிலக் காங்கிரசும் ஆட்சியில் அமர வேண்டும்.இப்படி ஆசைப்படுவதில் தவறில்லை. பத்தோடு ஒன்றாக இருக்காமல், அவர்களிடமிருந்து நாம் வித்தியாசப்படவேண்டும்.
தமிழக அரசியல் தலைவர்களிடையே வித்தியாசமான போக்குடையவர் மூப்பனார். இதை யாரும் மறுக்கமுடியாது. மக்களின் மனசாட்சியாக தமிழ் மாநில காங்கிரஸ் இருக்க வேண்டும்.
திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளால் இந்த முறை தேர்தலில் தனித்து வெற்றி பெற முடியாது. இதைதலைவர் மூப்பனாரும் புரிந்துகொண்டுள்ளார். தனது வலிமை, எதிரியின் பலவீனத்தைத் தெளிவாகத் தெரிந்துவைத்துள்ளார். எனவே வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவாக அவர்முடிவெடுக்க வேண்டும்.
தமிழகத்தில் வலுவான, நிலையான, திறமையான ஆட்சியை நடத்த த.மா.கா.வால் மட்டுமே முடியும் என்றார்சிதம்பரம்.