தமிழ்ப் புத்தாண்டாகுமா தைமுதல் நாள்?
பாபநாசம்:
தை மாதம் முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திராவிட கழகப்பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாபநாசத்தில் நடந்த தந்தை பெரியார் நினைவு தினத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:
தற்போது சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி வருகிறோம். அதற்குப் பதிலாக தமிழர்திருநாளான தைப் பொங்கல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்க வேண்டும் என்று மாநில அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
காவிய மயமான கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு இந்திக்குப் பதிலாகசமஸ்கிருதத்தை உள்ளடக்கிய மும்மொழித் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.
இந்த மும்மொழித் திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள தி.மு.க., ம.தி.மு.க., பாட்டாளிமக்கள் கட்சி ஆகிய கட்சிகள் எதிர்க்கின்றனவா? அல்லது ஏற்கின்றனவா என்பதை அக்கட்சிகள் தெளிவுபடுத்தவேண்டும் என்று பேசினார் வீரமணி.