புலிகள் பசிக்கு 22 ஆடுகள் பலி
போடி:
தேனி மாவட்டம் போடியில், புலிகள் தாக்கியதில் 22 ஆடுகள் இறந்தன.
போடி அருகேயுள்ளது முந்தல் கிராமம். முந்தல் மலையடிவாரமான பகுதியாக இருப்பதால் இங்கு புலிகள் நடமாடுவதாக பீதி கிளம்பியது.
இங்கு கூட்டுறவு சங்கத் தலைவராக இருப்பவர் ஜெயராஜ். இவரது ஆட்டுப் பண்ணையில் மொத்தம் 200 க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. சிலநாட்களாக இங்கு அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் ஒவ்வொன்றாகக் காணாமல் போயின. அவைகள் எப்படிக் காணாமல் போயின என்பது குறித்துவிவரம் எதுவும் தெரியாமல் இருந்தது.
அப்போது அந்தப் பகுதியில் புலிகளின் கால் தடம் பதிந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தத் தடத்தின் வழியாக சென்று பார்த்தபோது, புலிகள் ஆடுகளைவேட்டையாடி தின்றது கண்டு பிடிக்கப்பட்டது.
புலிகள், ஆடுகளை இழுத்துக் கொண்டு மலைப்பகுதிக்குச் சென்றன. மலைப்பகுதியில் ஆட்டு எலும்புகள் பல இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 22ஆடுகள் கொல்லப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே மலையில் பாறைகளுக்கு இடையே ஒரு புலி 3 குட்டிகளை போட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதன் அருகே சென்றால் புலி அடித்துக்கொன்று விடும் என்று யாரும் அப்பகுதிக்குச் செல்லவில்லை.
மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வனத்துறையினர் 6 புலிக்குட்டிகளை மலைப்பகுதியில் விட்டதாகவும், அவைகளில் 2 புலிகள் இறந்துவிட்டதாகவும் மற்ற புலிகள் வளர்ந்து இப்போது மக்கள் நடமாட்டம் உள்ள மலை அடிவாரப் பகுதிக்கு வந்து ரகளை செய்வதாகவும் கூறப்படுகிறது.