ரஷ்யா செல்கிறார் லட்சுமண் கதிர்காமர்
மாஸ்கோ:
இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நான்கு நாட்கள் அரசு முறை சுற்றுப்பயணமாக செவ்வாய்க்கிழமை ரஷ்யா செல்கிறார்.
கடந்த 18 ஆண்டுகளில் இலங்கையைச் சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஒருவர் ரஷ்யா வருவது இதுவே முதல்முறை. 1982 ம் ஆண்டுதான் கடைசியாகஇலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்தார்.
இதுகுறித்து மாஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகம் வெளியிட்ட அறிக்கை:
அமைச்சர் கதிர்காமர் தனது சுற்றுப்பயணத்தின் போது, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் இகோர் இவானோவை சந்தித்துப் பேசுவார். இரு நாட்டினரும்ஒருங்கிணைந்து செயல்படுவது மற்றும் இலங்கையில் உள்ள தற்போதைய நிலை ஆகியவை குறித்து இரு நாட்டு அமைச்சர்களும் பேசுவார்கள்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஐ.நா.சபையின் 55 வது கூட்டத்தில் ரஷ்யா மற்றும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்துப் பேசினார்கள்.
இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ளும் வகையிலும், இரு நாடுகளும் இணைந்துசெயல்படும் வகையிலும் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கதிர்காமர், ரஷ்ய வர்த்தக அமைச்சரை சந்தித்துப் பேசுவார்.
இலங்கை, தேயிலை, காபி, உணவுப் பொருட்கள், ஆடைகள் போன்றவற்றை ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. மேலும் ரஷ்யாவிலிருந்து உரவகைகள், ரசாயனப் பொருட்கள், இரும்பு எஃகுப் பொருட்கள் மற்றும் தொழிற்சாலை உபகரணங்களை இறக்குமதி செய்து கொள்கிறது.
ஐ.ஏ.என்.எஸ்.