புலிகள் பேச்சுவார்த்தைக்கு வரும்வரை தாக்குதல்... பிரதமர்
கொழும்பு:
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தைக்குப் புலிகள் சம்மதம் தெரிவிக்கும் வரை இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்தும் என்றுபிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து, தலைநகர் கொழும்பில் பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமநாயகே நிருபர்களிடம் கூறியதாவது:
இலங்கை இனப்பிரச்சனைக்கு உண்மையிலேயே தீர்வு காண புலிகள் விரும்பினால் அவர்கள் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்.அப்போது சண்டைநிறுத்தம் குறித்து நாங்கள் பரிசீலனை செய்வோம்.
விடுதலைப்புலிகளின் சண்டைநிறுத்தத்தை நாங்கள் ஏற்கனவே நிராகரித்து விட்டோம். நாங்கள் இப்போது இலங்கை ராணுவத்தில் சேர்ந்து தொடர்ந்து 3வருடங்கள் பணியாற்ற இளைஞர்களைத் தேர்வு செய்து வருகிறோம்.
யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து புலிகளை புறமுதுகிட்டு ஓடச் செய்வதே எங்களது தற்போதைய குறிக்கோளாகும் என்றார் அவர்.
முன்னதாக, புலிகள் கடந்த செவ்வாய்க்கிழமை சண்டைநிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளனர்.
ஆனால் இலங்கை அரசோ, புலிகள் தங்களிடம் ஆயுதபலம், படைபலம் குறைந்திருக்கும்போது மட்டுமே சண்டைநிறுத்தத்திற்கு முன்வருகின்றனர். இதுகடந்த காலங்களில் எங்களுக்குக் கிடைத்த கசப்பான அனுபவமாகும் என்று புலிகளைக் குற்றம்சாட்டியுள்ளது நினைவிருக்கலாம்.
ஐ.ஏ.என்.எஸ்.