உலகின் உதவி குவிகிறது
வாஷிங்டன்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகள் நிவாரண நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளன.
குஜராத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தால் அங்குள்ள பூஜ் மற்றும் அகமதாபாத் மாவட்டங்கள் உருத்தெரியாமல் சிதைந்துவிட்டன.
மனிதாபிமான அடிப்படையில் உலக நாடுகள் உதவி அளிக்க முன்வந்துள்ளன. அமெரிக்கா, 4.5 கோடி ரூபாய் மதிப்புக்கு பிளாஸ்டிக் ஷீட்டுகள், போர்வைகள்,தண்ணீர்தொட்டிகள், தண்ணீர் சுத்திகரிக்கும் கருவிகள், ஜெனரேட்டர்கள் ஆகியவற்றை அளித்துள்ளன.
ஆஸ்திரேலிய பிரதமர் ஜான் ஹோவர்டு, குஜராத் மக்களுக்காக ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்ததோடு, 2.5 கோடி ரூபாய்க்கு போர்வைகள், மருந்துப்பொருட்கள் மற்றும் துணிமணிகளை அனுப்பி வைத்துள்ளார்.
ஜப்பான் 4 கோடி ரூபாய் உதவி அளித்துள்ளது. பெல்ஜியம் நாடு நிவாரணப் பணிகளுக்காக 4 கோடி ரூபாய் உதவி அளித்துள்ளது. அயர்லாந்து ரூ 5 கோடி உதவிஅளித்துள்ளது.
ஓமன் நாடு நிவாரணப் பணிக்காக 1.5 டன் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் ஆகியவற்றை அனுப்பி வைத்துள்ளன. முதல் கட்டமாகஅனுப்பப்பட்ட இந்த உணவுப் பொருட்கள் அகமதாபாத் சென்றடைந்துள்ளன.
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போர்வைகளை அனுப்பி வைத்துள்ளது. கொரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்துள்ளன.நியுசிலாந்து நாடு 2, 20,000 டாலர்கள் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.
கேரளா உதவி:
பூமி அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு, கேரளா ரூ 1 கோடி வழங்கும் என்று மாநில முதல்வர் ஈ.கே.நாயனார் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications