பா.ஜ.க. 25 கோடி தருகிறது
டெல்லி:
குஜராத் மாநிலம் கட்ச், சூரத், பூஜ் மற்றும் அகமதாபாத் பகுதிகளில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 25 கோடி வழங்கவுள்ளதாகபாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சித் துணைத்தலைவர் ஜனா கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் வரலாற்றைப் புரட்டிப்போட்ட சம்பவமாகும். பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிடமிருந்து நிதி மற்றும் நிவாரண உதவிகள் வந்தவண்ணம்உள்ளன.
பாரதிய ஜனதா கட்சி ரூ 25 நிதியுதவி வழங்கத் திட்டமிட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் மாநில பிரிவினரிடமும் நிவாரண உதவிகளைச் செய்யுமாறுகேட்டுக் கொண்டுள்ளோம்.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணிமணிகள்தான் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது. மேலும் முக்கியத் தேவையானஉணவுப்பொட்டலங்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பழங்கள், பிஸ்கெட்டுகள், பற்பசை, மெழுகுவர்த்தி ஆகியவற்றை வழங்குமாறு பாரதிய ஜனதாக்கட்சித் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூஜ் பகுதியில் இன்னமும் மின்சாரம் சரிசெய்யப்படவில்லை. அதனால் மெழுகுவர்த்திகள், டார்ச் லைட்டுக்கள் ஆகியவை அதிக அளவில் தேவைப்படும்.நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிசைப்பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் மாநில அரசிடம் கடன் பெற்று வீடுகட்டியவர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
நிவாரணப்பணிகளைப் பார்வையிடுவதற்காக மூத்த தலைவர் ஜே.பி.மாத்தூர் தலைமையில் மத்திய ஒருங்கிணைப்புக் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது என்றார் ஜனாகிருஷ்ணமூர்த்தி.
ஐ.ஏ.என்.எஸ்.