உலக வங்கி நிதியுதவி
அகமதாபாத்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் சேர்ந்து 500 மில்லியன் டாலர்கள் அளிப்பதாகதெரிவித்துள்ளன.
குஜராத்தில் குடியரசு தினத்தன்று 6.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்ச், அகமதாபாத், சூரத், சுரேந்திரநகர் மாவட்டங்கள் கடும்சேதமடைந்தன.
கட்ச் மாவட்டத்திலுள்ள பூஜ் நகர் மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் உள்ள பிறமாநிலங்கள் உள்பட வெளிநாடுகளிலிருந்து நிதியுதவிகள் குவிந்த வண்ணம் உள்ளன.
இந்த நிலையில் உலக வங்கி, 12 பேர் கொண்ட குழுவை குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்புகிறது. அவர்கள் பிப்ரவரி12 ம் தேதி குஜராத் வருவார்கள். பின்னர் பூகம்ப நிவாரணமாக எவ்வளவு உதவி தேவைப்படும் என்பது குறித்து ஆய்வு செய்து குஜராத் மாநிலமுதல்வரின் முதன்மைச் செயலாளர் லாஹிரியிடம் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
அதற்குப்பின் உலக வங்கி நிதியுதவி செய்யும். உலக வங்கியிடமிருந்து 70 சதவீத நிதியதவி கடனாக அளிக்கப்படும். 30 சதவீதம் நிதியாக அளிக்கப்படும்.
கட்ச் மாவட்டத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மீண்டும் வீடுகள் கட்டுவதற்காக தேசிய வீட்டு வசதி வங்கி ரூ 10 கோடியும்,எச்.யூ.டி.சி.ஓ.வங்கி ரூ 15 கோடியும் வழங்க ஒத்துக்கொண்டுள்ளன. குஜராத் மாநிலத்தில் எச்.யூ.டி.சி.ஓ. 15 மையங்களை அமைத்து வீடுகள்கட்டுவதற்காக நிதியுதவியைப் பெறுவதற்காக ஆலோசனைகளை வழங்கவுள்ளது.
குஜராத் முதல்வரின் முதன்மை செயலாளர் லாஹிரி கூறுகையில் கட்ச் மாவட்டத்தில் மட்டும் 2 லட்சம் மக்களுக்கு உடனடியாக கம்பளிகள், நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட வேண்டும். 50,000 பேருக்கு தற்காலிகமாக கூடாரங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. பச்சாவ் மற்றும் அஞ்சார்பகுதிகளில் ஒரு வீடு கூட மீண்டும் சரிபார்த்து வாழ்வதற்கேற்ற வகையில் இல்லை என்றார்.
முன்னதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவிக்கையில், முதலில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று வீடுகள் ஏற்பாடு செய்துகொடுப்பது, அவர்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செய்து கொடுப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குஜராத்மாநிலம் முழுவதும் 10.6 லட்சம் சிறிய மற்றும் பெரிய கட்டிடங்கள் பூகம்பத்தால் இடிந்து விழுந்துள்ளன என்று கூறியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.