ஸ்டாலின் சொத்து வழக்கில் புதிய திருப்பம்
சென்னை:
சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் வருமானத்துக்கு மீறி சொத்து குவித்துள்ளது குறித்து மாநில லஞ்ச ஒழிப்புத்துறை மார்ச் 8-க்குள் விசாரித்து அறிக்கை அளிக்கவேண்டும் என சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டுள்ளது.
சமூக சேவகர் செண்பகமூர்த்தி என்பவர் இந்த அப்பீலை தாக்கல் செய்துள்ளர். அதில் அவர் கூறியுள்ளதாவது:
ஸ்டாலினுக்கு எதிரான மனுவை விசாரித்த முதன்மை செஷன்ஸ் நீதிபதி, விசாரணைக்கான காலவரம்பை நிர்ணயித்ததுடன் ஸ்டாலினின் வாக்குமூலத்தையும் தனதுதீர்ப்பில் மேற்கோள் காட்டியுள்ளார். இதன் மூலம் தவறான முன்னுதாரணத்திற்கு அடிகோலியுள்ளார்.
வழக்கை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு குறுகிய கால அவகாசம் நிர்ணயித்திருக்கிறார். இதன் மூலம் விசாரணை சரியாக நடைபெறாது. எனவே,ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க உத்தரவிட்ட முதன்மை செஷன்ஸ் நீதிபதியின் உத்தரவை தடை செய்ய வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இதனிடையே, இவ்வழக்கில் தன்னையும் சேர்க்கக் கோரிய அதிமுக வக்கீல் பிலிப் தாமஸ், தான் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவிசாரணையில் உள்ள நிலையில் செஷன்ஸ் நீதிமன்றம் இவ்வழக்கை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் கோரியிருந்தார்.
இவரது கோரிக்கையை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி தனது உத்தரவில் நிராகரித்து விட்டதால் அந்த உத்தரவை தடை செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார்.
தேர்தல் வருவதால் அவசரகதியில் லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணையை முடித்து உண்மையை மறைக்க ஸ்டாலின் முயல்கிறார். அவரின் தந்தை (கருணாநிதி)முதல்வராக இருப்பதால் அவரது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை முறையாக விசாரணை நடத்தாது.
எனவே, பாரபட்சமற்ற வகையில், காலவரை நிர்ணயிக்காமல் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என தாமஸ் தனது அப்பீலில் கோரியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications