ஜெ., ராமதாஸ் இணைந்தது ஏன்? வாழப்பாடி திடுக் தகவல்
சென்னை:
சென்னை அண்ணாசாலையில் உள்ள விலையுயர்ந்த கட்டிடத்தை வாங்கிக் கொண்டு தான் அதிமுக அணிக்கு ராமதாஸ் சென்றார் என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ்கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
அதிமுக அணியில் பாமக சேர்ந்த உடனேயே அக்கட்சியில் பெரிய குழப்பம் ஏற்படும் என்பது தெரிந்த விஷயம். கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல் காங்கிரஸ் ஆளும் பாமகவை பாண்டிச்சேரிக்குத் தாரை வார்த்திருக்கிறார் ஜெயலலிதா.
அண்ணாசாலையில் சபையர் தியேட்டர் உள்ள விலைமதிப்புள்ள நவரத்தின கற்கள் பெயரில் அமைந்துள்ள கட்டிடத்தை வாங்கிக் கொண்டுதான் ராமதாஸ் அதிமுகவில் சேர்ந்துள்ளார். இதற்கான ஒப்பந்தம் கடந்த மாதமே நடந்துள்ளது.
பாமக வுக்கு கொள்கை, கோட்பாடு எதுவுமே கிடையாது. பாமக வில் உள்ள ஒரு மத்திய அமைச்சர் கோப்பு ஒன்றில் கையெழுத்திடுவதற்காக ரூ 70கோடி வாங்கிக் கொண்டு அதை ராமதாசின் மகன் அன்பு மணிக்குக் கொடுத்திருக்கிறார்.இந்த விஷயம் சிபிஐக்குத் தெரியும்.
பாண்டிச்சேரியில் அதிமுகவும், பாமகவும் ஆட்சியைப் பங்கிடவிருப்பதால் 3 வது அணி அமையும் வாய்ப்புள்ளது.
மான அவமானங்களைத் தாங்கிக் கொண்டு அதிமுக வில் மூப்பனார் சேரும் வாய்ப்பும் உள்ளது. அதனால்3 வது அணி காங்கிரஸ் தலைமையில் ஏற்படும்.
அதிமுக வுடன் தமாகா கூட்டணி வைத்துக் கொள்வதை தமாகாவில் உள்ளவர்களே விரும்பவில்லை. இதனால் தானும் குழம்பி, மற்றவர்களையும்குழப்புகிறார் மூப்பனார்.
திமுக கூட்டணியில் எந்தப் பிரச்சனையும் வராது. தமாகா, திமுக கூட்டணிக்கும் வரலாம். கருணாநிதியை முதல்வராக்குவதே எங்கள் குறிக்கோள்என்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.