புலிகளுக்கு நிதி திரட்ட சிங்கப்பூரில் தடை
சிங்கப்பூர்:
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக நிதி திரட்டிய சிங்கப்பூரை சேர்ந்த இலங்கை தமிழருக்கு அந்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அரசின் உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கையில் தனி ஈழம் கோரி போராடி வரும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக சிங்கப்பூர் தமிழர்களிடம் இருந்து ரகசியமாக நிதி திரட்டப்பட்டு வந்தது.இதனை சிங்கப்பூர் அரசு தடை செய்துள்ளது.
நிதி திரட்டும் குழுவிற்கு தலைமை தாங்கிய இலங்கை தமிழர் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்றவர். அவர் 2 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது இருப்பிடம் மற்றும் வேலை பார்க்கும் நிறுவனம் ஆகியவற்றை மாற்றுவதற்கு அரசின் அனுமதி பெறவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மேலும் 2 சிங்கப்பூர் வாழ் தமிழர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பணிபுரிய விசா பெற்று நிதிதிரட்டும் பணியில் இருந்த மேலும் 10 பேருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மற்ற நாடுகளின் வேண்டுகோளின் பேரில் சிங்கப்பூர் அரசு இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிங்கப்பூரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டேஇவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் அரசால் எச்சரிக்கப்பட்டுள்ள நபர்கள் பற்றிய தகவல்களை வெளியிட உள்துறை அமைச்சகம் மறுத்து விட்டது.
கடந்த ஆண்டுதான் தாய்லாந்து அரசு புலிகளுக்காக கட்டப்பட்டு வந்த சிறிய நீர்மூழ்கி ஒன்றை கைப்பற்றியது. இதன் மூலம் வெளிநாடுகளிலிருந்து புலிகள்இயக்கத்திற்கு கிடைத்து வந்த உதவிகளின் அளவு குறையத் துவங்கியுள்ளது.
புலிகள் அமைப்பை பாதிக்கக்கூடிய இத்தகைய நடவடிக்கைகளால் புலிகள் இயக்கம் இலங்கையில் தனது போராட்டத்தை தீவிரப்படுத்துவதில்பிரச்சனைகள் எழக் கூடும் என்றும் தெரிகிறது.
யு.என்.ஐ.