ஜெ.வை தோற்கடிக்க முடியும்: கருணாநிதி
சிதம்பரம்:
ஜெயலலிதா போட்டியிடுவதை தடுக்க தி.மு.க.சூழ்ச்சி செய்யவில்லை என தமிழக முதல்வரும்,தி.மு.க.தலைவருமான கருணாநிதி கூறியுள்ளார்.
அடுத்தமாதம் 10ம் தேதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் நடைபெறுகிறது. தமிழக முதல்வரும்,தி.மு.க.தலைவருமான கருணாநிதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து இந்த மாதம் 17ம் தேதி முதல்சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தி.மு.க. வேட்பாளர் துரை கி.சரவணனை ஆதரித்து வியாழக்கிழமை கருணாநிதிபிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், கடந்த இரண்டு நாட்களாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். இன்றுஇரவு 10 மணிக்கு கும்பகோணத்தில் பிரசாரம் செய்யவுள்ளேன்.
இந்த மாதம் 23ம் தேதி நான் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளேன். என் வேட்புமனு ஏற்கப்படும் என நம்புகிறேன்.
வேட்புமனு ஏற்கப்படுமா என சந்தேகம் உள்ளவர்களெல்லாம் வேட்புமனு தாக்கல் செய்கிறார்கள். அந்தஅம்மையாரை (ஜெயலலிதா) போட்டியிடவிடாமல் தடுப்பதற்காக சூழ்ச்சி நடைபெறுகிறது என கூறி வருகிறது எனஅவர் கூறுகிறார்.
யார் சூழ்ச்சி செய்கிறார்கள். இங்குள்ள மக்கள் தமிழ் தேசக் கட்சியின் தலைவர் கண்ணப்பனின சூழ்ச்சியா? தி.மு.கபொருளாளர் வீராசாமியின் சூழ்ச்சியா? அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தின் சூழ்ச்சியா? சூழ்ச்சி என்றுசொன்னால் உச்ச நீதிமன்றத்தின் சூழ்ச்சியென்று வேண்டுமானால் கூறலாம்.
உச்ச நீதிமன்றம் 1997ம் ஆண்டு பிறப்பித்த ஆணைப்படி ஊழல் குற்றம்சாட்டப்பட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனைபெற்றிருந்தால் அவர்கள் 6 ஆண்டுகாலம் தேர்தலில் போட்டியிட முடியாது.
இந்த ஆணை சுற்றறிக்கையாக எல்லா தேர்தல் அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. எல்லா தேர்தல் அதிகாரிகையிலும் அந்த சுற்றறிக்கை இருக்கிறது.
வேட்புமனு தாக்கல் செய்யும் போது அந்த மனுவில் உங்கள் மீது வழக்கு இருக்கிறதா? தண்டனைபெற்றிருக்கிறீர்களா? என்ற கேள்வி இருக்கும். அதற்கு நான் இல்லை என்றுதான் பதிலளிப்பேன். ஆனால் அந்தஅம்மையார் ஆம் என்றுதான் பதிலளிக்க வேண்டும்.
இவர்கள் தேர்தலில் போட்டியிடாமல் செய்வதற்கு எந்த விதமான சூழ்ச்சியிலும் தி.மு.க. ஈடுபடவில்லை. இவர்கள்நின்றால் எதிர்கொள்ள எங்களுடைய இயக்கம் தயராக இருக்கிறது.
இவர் (ஜெயலலிதா) தோற்கடிக்க முடியாதவர் அல்ல. அவர் கடந்த தேர்தலில் பர்கூரில் தோல்வியடைந்தவர்தான்.எனவே அவர் தோற்கடிக்க முடியாத நிலையில் உள்ளவர் அல்ல.
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். யார் போட்டியிட்டாலும் அதை நாங்கள் வரவேற்கக்கூடியவர்கள்தான். ஆனால் சட்டத்தை உடைத்துவிட்டு வேலி தாண்டுவேன் என கூறுபவர்களுக்கு தண்டனைஉண்டு என உணர வேண்டும்.
அவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்களை மக்கள் நம்பவேண்டாம். மக்களுக்கும் உண்மை எது என்பதும் தெரியும்என்றார்.
முன்னதாக கடலூர் மஞ்சக்குப்பத்தில் தி.மு.க வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து கருணாநிதி பிரசாரம் செய்தார்.பின்பு புவனகிரியில் தமிழ்தேசம் கட்சி வேட்பாளர் கோபாலகிருஷணனுக்கு வாக்கு கேட்டு வேனில் இருந்தபடிபிரசாரம் செய்தார்.