ஜெ. செய்த திட்டமிட்ட குழப்பம்
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் மேலும் 2 தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதன் மூலம், குழம்பியகுட்டையை மேலும் குழப்பியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறைத்தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி ஆகிய இருதொகுதிகளில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரால் தேர்தலில் போட்டியிட முடியுமா என்பதுகுறித்து சர்ச்சை எழுந்துள்ளது. இந் நிலையில் புதிதாக ஒரு குண்டைப் போட்டுள்ளார் ஜெயலலிதா.
கடலூர் மாவட்டம் புவனகிரி மற்றும் புதுக்கோட்டை ஆகிய இரு தொகுதிகளில் ஜெயலலிதாவின் சார்பில்திங்கள்கிழமை திடீரென வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதிமுக உள்ளிட்ட அனைத்துக்கட்சியினருக்கும் இது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
புவனகிரியில் ஜெயலலிதாவின் சார்பில் துரை அன்பழகன் என்பவர் தேர்தல் அதிகாரி சந்தானத்திடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். புதுக்கோட்டையில், தேர்தல் அதிகாரி கந்தசாமியிடம், மாவட்ட ஜெயலலிதா பேரவைதுணை செயலாளர் பாஸ்கரன் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட மனு செய்துள்ளதால் எழுந்துள்ள சிக்கல்கள் என்ன?
- தேர்தல் நடைறை விதிகளின்படி பொதுத் தேர்தல் அல்லது இடைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிட முடியாது.
- போட்டியிடும் வேட்பாளர் அந்தத் தொகுதி தேர்தல் அதிகாரியிடம் நேரில் ஆஜராகி உறுதிமொழிப் பத்திரத்தை வாசித்தளிக்க வேண்டும். ஆனால், புதுக்கோட்டை, புவனகிரியில் ஜெயலலிதா அதைச் செய்யவில்லை.
- உறுதிமொழிப் பத்திரத்தில், தான் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறேன், 2 தொகுதிகளுக்கு மேல் போட்டியிடவில்லை என்பதை உறுதிமொழியாக வேட்பாளர் தெரிவிக்க வேண்டும்.
இத்தனை அம்சங்களும் ஜெயலலிதாவுக்கு பாதகமாக இருப்பதால் அவரது நான்கு மனுக்களுமே நிராகரிக்கப்படும்வாய்ப்பு உள்ளது.
ஜெயலலிதா திடீரென நான்கு தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தாலும்,அதற்கு இப்படியும் ஒரு காரணம் இருக்கலாம். ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளதன் காரணமாக அவரதுவேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
எனவே ஊழல் புகார் காரணமாக தனது மனு நிராகரிக்கப்பட்டது என்ற நிலை உருவானால் மக்களிடையே தனக்குக்கெட்ட பெயர் ஏற்படலாம், அதிமுக கூட்டணிக்கு தோல்வியை அது கொடுத்து விடும் என்று ஜெயலலிதாநினைத்திருக்கலாம்.
எனவே, அப்படியில்லாது, தேர்தல் விதிமுறைப்படி தனது மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக இருந்தால் தேர்தல்வெற்றியை அது பாதிக்காது, ஊழல் புகார் காரணமாக தனது மனு நிராகரிக்கப்படவில்லை என்று காட்டிக்கொள்ளவும் அது வசதியாக இருக்கும் என்று ஜெயலலிதா நினைத்திருக்கலாம் அல்லது அவருக்கு ஆலோசனைவழங்கப்பட்டிருக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எது எப்படியோ, ஜெயலலிதா ஏற்படுத்தியுள்ள புதுக் குழப்பத்திற்கு இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முடிவுதெரிய வரும்.












Click it and Unblock the Notifications