உழவர் சந்தைகளை மூடுவதா? குமரியார் கண்டனம்
சென்னை:
உழவர் சந்தைகளை மூடும் தமிழக அரசின் முடிவுக்கு தொண்டர் காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
ஆளுநர் உரை மிகவும் ஏமாற்றம் தருவதாக அமைந்துள்ளது. உழவர் சந்தையின் வெற்றியைக் கண்டுதான் மீனவர்சந்தை வேண்டுமென்று மக்கள் கோரிக்கை வைத்தார்கள். ஆனால் அத்தகைய உழவர் சந்தைகளை மூட தமிழகஅரசு முடிவு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழகமெங்கும் 460 மில்கள் மூடிக் கிடக்கின்றன. அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் பட்டினியில் பரிதவித்துவருகிறார்கள். அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க முனைப்பு காட்டாமல் பயனுள்ள உழவர் சந்தைகளை மூட தமிழகஅரசு முனைப்பு காட்டுவது வேதனைக்குரியது என்று குமரி அனந்தன் கூறியுள்ளார்.
வாழப்பாடி எதிர்ப்பு:
உழவர் சந்தையை மூடுவதற்கு தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியும் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக அரசு குறைகளைக் களைய வேண்டுமே தவிரஉழவர் சந்தையை மூடக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அதிமுக அரசு பதவியேற்றதையடுத்து நடந்த கவர்னர் உரையில், தமிழகம் முழுவதும் உழவர் சந்தையைமூட தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகக் கூறப்பட்டிருந்தது.
இதற்கு சேலம் மாவட்டம் உள்பட பல மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்நடத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.