தங்கக் காசு புதையல்: சேலத்தில் பரபரப்பு
சேலம்:
சேலத்தில் வீடு கட்ட தோண்டிய இடத்தில் தங்கக் காசு புதையல் கிடைத்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் அருகே உள்ள தாரமங்கலத்தில் கைலாசர் நாதர் கோயில் உள்ளது. இந்தக் கோயிலைச் சுற்றிலும் பலஇடங்களில், இதற்கு முன் சிறு சிலைகள் மற்றும் செப்புக் காசுகள் கிடைத்துள்ளன.
இந்த கோயிலுக்குச் சொந்தமான நிலம் ஒன்றில் பெருமாள் (70) என்ற விவசாயி குடிசை போட்டு குடியிருந்துவந்தார். இந்த நிலம் அவருக்குச் சொந்தமாக்கப்பட்டது.
இதையடுத்து அந்த நிலத்தில் வீடு கட்ட முடிவு செய்தார். எனவே, அங்கு வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டப்பட்டது.இந்த குழியைத் தோண்டிய தொழிலாளர்கள், திடீரென கடப்பாரை உள்ளே சென்றதை உணர்ந்தனர். அங்கு வேறுஒரு பள்ளம் இருப்பதைக் கண்டு, அதை முழுமையாகத் தோண்டினர்.
அப்போது அங்கு இரண்டு பெட்டிகள் நிறைய தங்கக் காசுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. 1410 என்ற எண்பொறிக்கப்பட்ட கல் ஒன்றும் கிடைத்துள்ளது. இந்த தங்கக்காசுகளை பங்கு போட்டுக் கொள்ள தொழிலாளர்களும்பெருமாளும் முடிவு செய்தனர். ஆனால், அவற்றை பெருமாள் எடுத்துச் சென்று மறைத்து வைத்துக் கொண்டதாகக்கூறப்படுகிறது.
இதையடுத்து தொழிலாளர்கள் மூலம் இந்த விஷயம் கசியத் தொடங்கியது. இதனால் கிராம மக்கள் அனைவரும்புதையல் கிடைத்துள்ளது குறித்து பரபரப்பாகப் பேசிக் கொள்கின்றனர். எனவே, இந்த புதையல் குறித்து தாசில்தார்தற்போது விசாரணை மேற்கொண்டுள்ளார்.
கல்வெட்டில் 1410 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், அந்தக் கல் 1410 ம் ஆண்டைச் சேர்ந்ததாக இருக்கும் எனக்கருதப்படுகிறது. விரைவில் இந்தப் பகுதியில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications