தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவர் வெற்றி
கோவை:
தோல்வி பயத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட மாணவன், 59 சதவீதம் மதிப்பெண் பெற்றுதேர்ச்சி அடைந்துள்ளார்.
கோவை அருகே உள்ள மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் நீலாமணி. இவர் உருளைக் கிழங்கு வியாபாரம் செய்துவருகிறார். இவரது மகன் செந்தில் என்ற செந்தில்வேல் முருகன் (16).
இவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். தேர்வும் எழுதினார். ஆனால்,தேர்வில் தோற்று விடுவோம் என்ற தோல்வி பயத்தில் இருந்து வந்துள்ளார்.
திங்கள்கிழமை தேர்வு மூடிவுகள் அறிவிப்பதாக இருந்தது. இதனால் செந்திலுக்கு தோல்வி பயம் அதிகரித்தது.தோல்வி உறுதி என எண்ணிய செந்தில், ஞாயிற்றுக்கிழமை இரவே தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த நிலையில், திங்கள்கிழமை தேர்வு முடிவுகள் வெளியானது. அவரது சக நண்பர்கள் செந்திலின் தேர்வுமுடிவைப் பார்க்க ஆசைப்பட்டனர். அவரது மதிப்பெண்ணை இன்டர்நெட் மூலம் பார்த்தனர். அப்போது அவர்59 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.