"மெகா போய் "மஹா வந்தது!
சென்னை:
சன் டிவியில் புதிதாக ஒரு மஹா சீரியல் துவங்கியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாகி வந்த கோடீஸ்வரன் நிகழ்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அந்தநேரத்தில் சூலம் என்ற மஹா சீரியலை ஒளிபரப்பத் துவங்கியுள்ளனர்.
சினிமா சுவலட்சுமி இதில் ஹீரோயினாக நடித்துள்ளார். ரொம்ப நிதானமாக ஆரம்பித்து, ரொம்ம்ம்ம்ம்ப நிதானமாக முடிக்கிறார்கள். டைட்டிலே ஒருஐந்து நிமிடம் வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
சீரியல்களுக்கான கதையைத் தேடுவதுதான் ஒரு பிரச்சினையே இல்லையே. எனவே, பார்வதிபுரம் என்ற குக்கிராமத்தில் இறையருளுக்கும்,சாத்தானுக்கும் இடையே நடக்கும் பெரும் போர்தான் படத்தின் கதையாம்.
முதல் எபிசோடிலேயே சர்வசாதாரணமாக ஒருவரது தலையை வெட்டி எடுத்து சாக்குப் பையில் கூலாக போட்டுக் கொண்டு போவதாக காட்டுகிறார்கள்.போகப் போக எதெல்லாம் போகுமோ தெரியவில்லை.
வழக்கமாக அரை மணி நேரம்தான் மெகா சீரியல்கள் இருக்கும். ஆனால் சூலம் ஒரு மணி நேரத்திற்கு ஓடுகிறது. இந்த மஹா சீரியலில் குயிலி, ஆனந்த்,பாலாசிங், கே.ஆர்.வத்சலா ஆகியோரும் நடித்துள்ளார்கள். மலையாளத்து மியூசிக் டைரக்டர் ஜான்சன் இசையமைத்துள்ளார். இளவரசன் இயக்கியுள்ளார்.டெலிபோட்டோ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது.