மிகப்பெரும் தாக்குதலுக்கு புலிகள் திட்டம்: அச்சத்தில் ராணுவம்
கொழும்பு:
மிகப்பெரிய தாக்குதலுக்கு புலிகள் தயாராகி வருகின்றனர் என்று இலங்கை ராணுவம் கவலையோடு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தொடர்ந்து 18 ஆண்டுகளாக நடந்து வரும் இனப்பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில் நார்வேதூதுக்குழு சமரச முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
இருப்பினும், தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
யாழ்ப்பாணத்தில் உள்ள நாகர்கோவில் என்ற இடத்தில் நடந்த மோதலில் 5 விடுதலைப்புலிகள் உயிரிழந்தனர். கொக்குதுடவைஎன்ற இடத்தில் விடுதலைப்புலிகள் 4 பேர் பலியானார்கள்.
இதே போல் மடுவில் பகுதியில் புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 6 ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
இந்த நிலையில் விடுதலைப்புலிகள் மிகப்பெரிய தாக்குதலுக்குத் தயாராகி வருகிறார்கள் என்று சிங்கள ராணுவத்தினர்தெரிவித்துள்ளனர்.
வவுனியாவுக்கு நுழைவு வாயிலாக இருக்கும் பிரமணம்குளம் என்ற இடத்தை விடுதலைப்புலிகள் மூடிவிட்டனர்.
அரசு அனுப்பிய உணவுப் பொருட்களும், செஞ்சிலுவை சங்கம் அனுப்பிய உணவு லாரிகளும் வவுனியாவுக்குள் செல்லமுடியாமல் திரும்பி விட்டன. கடந்த 22 ம் தேதி முதல் புலிகள் இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.