"கண்ணன்" என்ற யானையைக் காணிக்கை செலுத்தினார் ஜெ.
குருவாயூர்:
குருவாயூர் கோவிலில் "கண்ணன்" என்ற யானையை திங்கள்கிழமை காலை காணிக்கையாகச் செலுத்தினார் தமிழக முதல்வர்ஜெயலலிதா.
தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக வேண்டும் என ஜெயலலிதா பல கோவில்களில் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் செய்துவந்தார். தான் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானால் குருவாயூர் கோவிலுக்கு யானை காணிக்கை செலுத்துவதாகவேண்டிக் கொண்டார்.
தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதும், தான் வேண்டிக் கொண்டபடி குருவாயூருக்கு காணிக்கை செலுத்த "கண்ணன்" என்றயானையை வாங்கினார்.
இந்த யானையை அவர் குருவாயூர் கோவிலுக்குப் பரிசு கொடுப்பதற்குள், அவருக்குப் போதும், போதும் என்றாகிவிட்டது.பல்வேறு அரசியல் பிரச்சனைகள் காரணமாக அவர் குருவாயூர் போவது ஒத்திவைக்கப் பட்டுக் கொண்டே இருந்தது.
இந்நிலையில், அவர் கடந்த சனிக்கிழமை காலை குருவாயூர் சென்று, "கண்ணனை"க் காணிக்கையாக்குவதற்கு நாள்குறிக்கப்பட்டது. விஷயம் கேள்விப்பட்டதும், கோவில் தேவஸ்தானத்தைச் சேர்ந்தவர்களும் இதற்கான அனைத்துஏற்பாடுகளையும் செய்து விட்டனர்.
ஆனால், சனிக்கிழமை நள்ளிரவுக்கு மேல் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கைது செய்யப்பட்டதைஅடுத்து, ஜெயலலிதாவின் குருவாயூர் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அவர் திங்கள்கிழமை அதிகாலை, தன்னுடைய தோழி சசிகலாவுடன் தனி விமானத்தில் குருவாயூர் சென்றார். அங்குஒரு விருந்தில்லத்தில் சிறிது நேரம் அவர்கள் ஓய்வெடுத்த பின்னர், கோவிலுக்குச் சென்றனர்.
ஆனால், அங்கும் அவர்களுக்கு ஒரு பலத்த எதிர்ப்பு காத்திருந்தது. கோவிலின் மேற்கு வாசலில், மனித உரிமைக் கழகத்தைச்சேர்ந்தவர்களும், பாஜகவைச் சேர்ந்தவர்களும் பக்தர்கள் போல நின்றிருந்தனர். ஜெயலலிதா வந்ததும், அவர்கள் அனைவரும்பலத்த அவருக்கு எதிராக பலத்த கோஷங்களை எழுப்பினர்.
ஜெயலலிதாவைக் கோவிலுக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும் அவர்கள் கோஷம் போட்டனர். இதையடுத்து, கோவிலில்பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே அங்கு பாதுகாப்புக்காகக் குவிக்கப்பட்டிருந்த போலீஸார், விரைந்து வந்து ஆர்ப்பாட்டம்செய்தவர்களின் மேல் தடியடி நடத்தினர்.
கோவிலுக்கு வெளியேயும் பாஜக தொண்டர்கள் ஜெயலலிதாவின் வருகையை எதிர்த்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் இங்கும்போலீஸார் தடியடி நடத்தினர்.
இச்சம்பவங்களில், 25க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். 6 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
கருணாநிதி கைது செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில், கேரளாவிலுள்ள பாஜகவினர் கொதித்துப் போயுள்ளனர் என்றும், அதனால்இப்போதைக்கு குருவாயூருக்கு வரவேண்டாம் என்றும் கேரள முதல்வர் ஏ.கே. அந்தோனி ஏற்கனவே ஜெயலலிதாவுக்குஎச்சரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இந்த எச்சரிக்கையையும் மீறி அவர் குருவாயூர் வந்ததால், கோவிலில் ஏற்பட்டுள்ள தடியடிச் சம்பவங்கள் கேரளஅரசுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது என்றும் கேரள அரசு வட்டாரங்கள் கூறின.
இந்தப் பரபரப்பான சூழ்நிலையிலும், கோவிலின் கிழக்கு வாசல் வழியாக, தன் தோழியுடன் கோவிலுக்குள் நுழைந்த ஜெயலலிதா,வேத மந்திரம் முழங்க "கண்ணனை"க் கோவிலுக்குக் காணிக்கையாகச் செலுத்தினார். காணிக்கை வழங்கும் நிகழ்ச்சி சுமார் அரைமணி நேரம் நடைபெற்றது.
ஜெயலலிதா, கேரளாவில் உள்ள மேலும் 10 கோவில்களுக்குச் சென்றுவிட்டு, திங்கள்கிழமை இரவு சென்னை திரும்புவார் என்றுகூறப்படுகிறது.