9 மனுக்களை வாங்க 30 அதிகாரிகள்
கோவை:
கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு நீதி நாளில் 9 பேர் மட்டுமே தங்கள் மனுக்களைக் கொடுக்கவந்திருந்தனர். ஆனால், அந்த மனுக்களை வாங்குவதற்கோ 30 அதிகாரிகள் வந்திருந்தனர்.
கோயம்புத்தூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மனு நீதிநாள் நடைபெறுவது வழக்கம்.
ஆனால், கடந்த திங்கள்கிழமை தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கருணாநிதியின் கைதைக் கண்டித்து பந்த்நடத்தின.
இதனால், கோவை நகரில் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, இங்கு பஸ்கள் ஓடவில்லை. அதனால்,பொதுமக்கள் மனுக் கொடுக்க பெருமளவில் வரவில்லை.
ஆனால், 30 அதிகாரிகள் மனுக்களைப் பெற்று பரிசீலனை செய்ய அரசு வாகனங்களில் வந்திருந்தனர். இவர்களிடம் 9 பேர்மட்டுமே மனுக்களைக் கொடுத்தனர்.
மாவட்ட கலெக்டரும் சிறிது நேரம் மனுக்களைப் பெற்றுக் கொண்டிருந்தார். பின்னர், யாரும் வராததால், வேறு பணியைக்கவனிக்க அவர் சென்று விட்டார்.