ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தே.ஜ.கூட்டணி சிபாரிசு
டெல்லி:
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணிக்குழு பிரதமரிடம் சிபாரிசு செய்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் கைது செய்யப்பட்ட சம்பவத்தையடுத்துதேசிய ஜனநாயகக் கூட்டணி மூவர் குழு ஒன்றை தமிழகத்துக்கு அனுப்பி வைத்தது.
ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமையிலான இந்தக் கூட்டணியில் மத்திய அமைச்சர் தின்ஷா, பாஜக மூத்த தலைவர் விஜய்மல்ஹோத்ரா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இவர்கள் முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரை சந்தித்துப் பேசியது.
பிற அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்களிடமும் நடந்த சம்பவம் குறித்து இந்த மூவர் குழு விசாரித்தது.
விசாரணை அறிக்கையை பிரதமர் வாஜ்பாயிடம் திங்கள்கிழமை கொடுத்தது. இந்த மூவர் குழு பிரதமர் வாஜ்பாய் வீட்டுக்குச்சென்று தங்களது விசாரணை அறிக்கை, புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களை பிரதமரிடம் தாக்கல் செய்தது.
இந்நிலையில் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் திங்கள்கிழமை மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடப்பதாக இருந்தது.பின்னர் இந்த மத்திய அமைச்சரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, தமிழக நிலையை நேரில் ஆய்வு செய்துவிட்டு, டெல்லி திரும்பிய பெர்னாண்டஸ் தலைமையிலான குழு அளித்தஅறிக்கை குறித்தும், தமிழக நிலை குறித்தும் விவாதிக்க தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டம் பிரதமர்வாஜ்பாய் தலைமையில் திங்கள்கிழமை மாலை நடந்தது.
இதில், கூட்டணிக் கட்சித் தலைவர்கள், ஒருமித்த கருத்தாக தமிழக அரசை கலைக்க வற்புறுத்தினர். ஜார்ஜ் பெர்னாண்டஸ்தலைமையிலான குழு அளித்த அறிக்கையும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இரண்டு மணி நேரம் இந்தக் கூட்டம் நடந்தபின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அமைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 356 வது பிரிவைப் பயன்படுத்தி ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது உள்பட கடும் நடவடிக்கைகளை தமிழகஅரசு மீது மேற்கொள்ள வேண்டும் என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
தமிழகம் சென்றிந்த எங்கள் குழு தனது அறிக்கையில், தமிழகத்தில் சட்டத்தையும், ஜனநாயகத்தையும் நிலைநாட்ட தேவைப்படும்எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளுமாறு அரசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.
மேலும் தனிநபர் ஒருவரின் பழிவாங்கும் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்குமாறும் பரிந்துரை செய்திருந்தோம்.
356 வது பிரிவின்படி அரசை கலைக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பாஜக, திமுக உள்பட கட்சிகளின் கோரிக்கைநியாயமானது. வலுவானது என்பது தமிழகம் சென்றபோது தெரிந்ததாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
எங்களது கோரிக்கைகளை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் கூட்டம் முழுமையாக ஏற்றுக்கொண்டனர்.
இவ்வாறு ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார்.
இதன்காரணமாக செவ்வாய்க்கிழமை நடக்கவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தமிழக அரசைக் கலைக்க ஜனாதிபதிக்குப்பரிந்துரை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.