கருணாநிதி கைது: சி.பி.ஐ.விசாரணை கோருகிறது காங்.
சென்னை:
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழககாங்கிரஸ் சட்டக்குழுத் தலைவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் சட்டக்குழுத் தலைவர் சூரியப்பிரகாசம் சென்னை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்கூறியிருப்பதாவது:
கடந்த 29 ம் தேதி நள்ளிரவு தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டு, அடித்து இழுத்துச் செல்லப்பட்டார்.
அவரது உடல் மற்றும் வயது ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் சிபிசிஐடி போலீஸார் மிகவும் முரட்டுத்தனமாக நடந்துகொண்டுள்ளனர்.
கருணாநிதி கைது செய்யப்படும்போது, அருகிலிருந்த முரசொலி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோரையும் அவர்கள் கைது செய்தனர்.
குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் தீவிரவாதியாக இருந்தாலும் கூட அவரை கைது செய்வதற்கு சில விதிமுறைகள் உள்ளன. இந்தவிதிமுறைகள் கருணாநிதி விஷயத்தில் மீறப்பட்டுள்ளன.
எனவே கருணாநிதி கைது செய்யப்பட்டதன் பின்னணியில் உள்ள விஷயங்கள் குறித்து அறியவும், உண்மையை உலகுக்குஉணர்த்திடவும் இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
நான் எதிர்க்கட்சியாக இருந்த போதிலும், மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படக்கூடாது என்பதற்காக இந்த மனுவைத்தாக்கல் செய்கிறேன்.
கருணாநிதியைக் கைது செய்தபோது மிருகத்தனமாக நடந்து கொண்ட சிபிசிஐடி டிஐஜி முகமது அலி மற்றும் அவருடன் வந்தபோலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு ஹைகோர்ட் நீதிபதிகள் ஜெயின் மற்றும் தங்கவேல் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு 2 வாரங்களில் பதில் தரும்படி, தமிழக அரசு உள்துறை செயலாளர், போலீஸ்டைரக்டர் ஜெனரல் மற்றும் சிபிஐ இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications