ஆளுனர் அழைப்பு: ராஜ்பவன் சென்றார் ஜெயலலிதா
சென்னை:
தமிழக ஆளுனர் ரங்கராஜனை முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை கவர்னர் மாளிகையில் சந்தித்துப் பேசினார்.ஆளுனரின் அழைப்பின் பேரில் தான் இந்தச் சந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது.
கருணாநதி கைது சம்பவத்தின் தொடர்ச்சியாக ஆளுனராக இருந்த பாத்திமா பீவியின் பதவி பறிபோனது.இதையடுத்து ஆந்திர மாநில ஆளுனர் ரங்கராஜன் தமிழக ஆளுனராக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
கருணாநிதியை முரட்டுத்தனமாக கைது செய்த போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நடவடிக்கை எடுப்பது குறித்துபரிசீலிக்கப்படும் என்று தலைமைச் செயலாளர் சங்கர் கூறியுள்ளார். போலீஸ் அதிகாரிகளை விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று டி.ஜி.பி. ரவீந்திரநாத் கூறியுள்ளார்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை வருமா என்ற குழப்பம் நிலவி வரும் நிலையில் ஆளுனர் ரங்கராஜன் முதல்வர்ஜெயலலிதாவை தன்னை வந்து சந்திக்குமாறு அழைத்தார்.
இதையடுத்து ஜெயலலிதா ராஜ்பவன் விரைந்தார். அவருடன் சில அதிகாரிகளும் சென்றனர். ஆளுனரும்,முதல்வரும் என்ன பேசினார்கள் என்பது குறித்துத் தெரியவில்லை.
போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை மற்றும் கருணாநிதி கைது விவகாரம் குறித்து ஆளுனர் முதல்வரிடம்கேள்விகள் கேட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.