உத்தரமேரூர் அரசு பள்ளி வகுப்பறையில் விஜய் படத்தை வைத்து ரீல்ஸ்! தவெக நிர்வாகி நீக்கம்!
காஞ்சிபுரம்: உத்தரமேரூர் அரசு பள்ளி வகுப்பறையில் விஜய்யின் படத்தை காட்டி வகுப்புக்கு இடையூறு செய்ததாக கண்டனங்கள் எழுந்த நிலையில் தவெக நிர்வாகி ராஜேஷ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கான உத்தரவை காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான தென்னரசு பிறப்பித்தார்.
காஞ்சிபுரம் உத்தரமேரூர் அருகே தளவராம்பூண்டி ஊராட்சி ஒன்றியப் பள்ளி வகுப்பறைக்கு தவெக ஒன்றிய செயலாளர் நிர்வாகி ராஜேஷ் சென்ற 20-க்கும் மேற்பட்டோர், அங்கிருந்த மாணவ, மாணவிகளிடம் விஜய்யின் புகைப்படத்தை காட்டி "இவர் யார்" என கேட்டனர்.

அப்போது மாணவர்கள் விஜய் என சொன்னதும், அங்கிருந்த சிலர் "விஜய் அண்ணா" என சொல்லுமாறு கூறினார். இதையடுத்து வகுப்பறையில் விஜய்யின் படத்தை எங்கு மாட்டுவது என ஆலோசனை நடத்தினர்.
பின்னர் விஜய்யின் புகைப்படத்தை வகுப்பறையில் மாட்டி ரீல்ஸ் எடுத்தனர். இந்த ரீல்ஸ் வைரலான நிலையில் அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தவெக நிர்வாகி ராஜேஷ், கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களை செய்ததால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான தென்னரசு அறிவித்துள்ளார்.
இந்த ரீல்ஸ் குறித்து அண்ணாமலை கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, ஒரு அரசுப் பள்ளி வகுப்பறையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட தவெகவினர் சென்று, முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில், அரசுப் பள்ளிகளுக்கு சரியான கட்டிடங்கள் கூட இல்லாமல் தரமிழந்து போய்விட்ட நிலையில், தற்போதைய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், சகோதரர் ராஜ்மோகனுக்கு, அவற்றின் பெருமையை மீட்டெடுக்கும் மிகப்பெரும் பணி முன்னால் இருக்கிறது. ஆனால், தவெக கட்சியினரின் இதுபோன்ற செயல்பாடுகள், அரசுப் பள்ளிகளின் நிலையை மேலும் அவலப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.
ஆளுங்கட்சியினர் என்பதற்காக, அரசுப் பள்ளிகளில் சென்று, வகுப்புகளைத் தொந்தரவு செய்வதை, முதலமைச்சர் விஜய்யே ஏற்றுக் கொள்ளமாட்டார் என்று நம்புகிறோம். மீண்டும் இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு, தங்கள் கட்சியினருக்கு அறிவுறுத்தும்படி முதலமைச்சரையும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சரையும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து பிரேமலதா விஜயகாந்த் தனது கண்டனத்தில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள அரசுப் பள்ளியின் வகுப்பறைக்குள் பாடம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரங்களில், மாணவர்களிடம் முதல்வர் விஜய் புகைப்படத்தைக் காட்டி அவரின் பெயரைக் கேட்பது, மாணவர்கள் விஜய் என்று கூறுவது அதற்கு த.வெ.க நிர்வாகிகள் அவர் எங்களுக்கெல்லாம் அண்ணன் உங்களுக்கு அவர் மாமா என்று கூறுவது மற்றும் பெரும் தலைவர்கள் புகைப்படம் எங்கு உள்ளது அங்கே அவர் புகைப்படத்தை வைக்கப்போகிறோம் என்று கூறி புகைப்படத்தை வைப்பதும் மற்றொரு பள்ளியில் த.வெ.க கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்வதாகச் சென்று அதில் நிர்வாகி ஒருவர் அவரின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியதாக தகவல்கள் வெளியாகி மக்களிடையே பெரும் அதிருப்தியும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications