அறங்காவலர்கள் நியமன விவகாரம்: தமாகா நிர்வாகிகள் கூட்டம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு, புதிதாக 5 அறங்காவலர்களை காங்கிரஸ் கட்சி நியமித்தது தொடர்பாக, தமிழ்மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் திங்கள்கிழமை கூடி, விவாதித்தனர்.
மூப்பனாரின் மறைவிற்குப் பின்னர், இந்த அறக்கட்டளை என்னவாகும் என்ற கேள்வி அனைவருடையமனத்திலும் எழுந்தது.
இக்கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, 5 புதிய அறங்காவலர்களை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி நியமித்தது.இவர்களில் 4 பேர் காங்கிரஸ்காரர்கள். 5வது நபர் தமாகாவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான ஜெயந்திநடராஜன்.
இந்நிலையில், இவ்விஷயம் தொடர்பாக, தமாகா நிர்வாகிகள் கூடி விவாதித்தனர். ஜெயந்தி நடராஜன், ராமசாமிஉடையார், எஸ். ஆர். பாலசுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ், ஞானதேசிகன், சோ. பாலகிருஷ்ணன் ஆகியோர்இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
சத்தியமூர்த்தி பவனில் நடந்த இக்கூட்டத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும்,காங்கிரஸ் கட்சியால் புதிய அறங்காவலராக ஜெயந்தி நடராஜன் நியமிக்கப்பட்டது குறித்து, அவரிடம் விளக்கம்கேட்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்தப் பிரச்சனையில், சட்டபூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள், இதுகுறித்து நிருபர்கள் கேட்டபோது விவரம் கூற மறுத்து விட்டனர்.
பீட்டர் அல்போன்ஸை முற்றுகையிட்ட சில நிருபர்கள், அவரிடம் கேட்டபோது, "பொறுத்திருந்து பாருங்கள்" என்றுமட்டும் கூறிவிட்டுப் போய்விட்டார்.