அமெரிக்காவுடன் இணைந்து செயல்பட தலிபான் எதிர்ப்புப் படை தயார்
மலாஸ்பா (ஆப்கானிஸ்தான்):
தலிபான்களை எதிர்த்துப் போராடி வரும் ஆப்கானிஸ்தான் எதிர்ப்புப் படையினர் தங்களை அமெரிக்கா ஆதரிக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் பரப்பளவில் சுமார் 7 சதவீதம் இவர்களின் கையில் தான் உள்ளது. இவர்களை ஒடுக்க தலிபான் ஆட்சியாளர்கள் எடுத்தமுயற்சிகள் பலனளிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அரசும் இந்த எதிர்ப்புப் படையினரைத்தான் ஆதரித்து வருகிறது. இந்த அரசைத் தான் இந்தியாவும் அங்கீகரித்துள்ளது. இந்த அரசின் ஜனாதிபதி புர்ஹானுதீன் ரப்பானி பலஆண்டுகள் இந்தியாவில் தான் தங்கியிருந்தார்.
இந் நிலையில் தலிபான்களின் முக்கிய கூட்டாளிகளான ஒசாமா பின் லேடனின் ஆட்கள் டி.வி நிருபர்கள போல நடித்து குண்டு வீசி அகமத்ஷா மசூதைக் கொன்றுவிட்டனர். இப்போது அவரது படையில் நம்பர் டூவாக இருந்த பகீம் தான் இந்த எதிர்ப்புப் படைக்குதலைமையேற்றுள்ளார்.
இப்போது தலிபான்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தவுள்ள நிலையில் ரப்பானி அரசின் வெளியுறவுத்துறை அமைச்சரான அப்துல்லாஅப்துல்லா நிருபர்களிடம் கூறியதாவது:
தனது போர் விமானங்களைக் கொண்டு தாக்குவதால் தலிபான்களை அமெரிக்கா வென்றுவிட முடியாது. தலிபான்கள் பதுங்கித் தாக்குதல்நடத்துபவர்கள். அவர்களை எதிர்க்க நார்த்தர்ன் அலையன்ஸ் படையால் தான் முடியும். இந்தப் படையினருக்கு அமெரிக்கா உதவினாலேபோதும். தலிபான்களை ஒழித்துவிடலாம்.
மலைகளிலும் குகைகளிலும் மறைந்துள்ள பின் லேடனின் கூட்டாளிகள், தலிபான்களை நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக தாக்கிவருகிறோம். எங்களின் தாக்குதல்களுக்கு அமெரிக்கா உதவ வேண்டும்.
அமெரிக்காவில் தாக்குதல் நடந்த சில தினங்களுக்கு முன் தான் அகமத் ஷா மசூத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவை இரண்டுமே பின்லேடனின் செயல்கள் தான். இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சம்பவங்கள் தான் என்றார் அப்துல்லா அப்துல்லா.