மதுரை அருகே வீட்டுக் காவலில் தலித் பெண் வேட்பாளர்.
மதுரை:
மதுரை அருகே, உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்ய முயன்றதற்காக, தலித்பெண் ஒருவரை பிரமலைக் கள்ளர் ஜாதியைச் சேர்ந்தவர்கள், அவருடைய வீட்டிலேயே நேற்றிரவு (ஞாயிறு)காவலில் வைத்தனர்.
மதுரை அருகே நாட்ராமங்கலம், பாப்பராப்பட்டி மற்றும் கீரிப்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தலித்துகள்எப்போதுமே பிரமலைக் கள்ளர் ஜாதியினரால் வெறுத்து ஒதுக்கப்பட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவுப்பு வெளியானதும், இந்தப் பஞ்சாயத்து தொகுதிகளில்தலித்துகள் யாரும் போட்டியிடக் கூடாது என்று பிரமலைக் கள்ளர்கள் தலித்துகளை மிரட்டி வந்தனர்.
நாட்ராமங்கலத்தைச் சேர்ந்த தலித் இனத்தைச் சேர்ந்த சரஸ்வதியம்மாள் என்ற பெண், இதையும் மீறிதைரியத்துடன் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய முன் வந்தார்.
இதனால் கொதித்துப் போன பிரமலைக் கள்ளர்கள், நேற்றிரவு சரஸ்வதியம்மாள் வீடு இருக்கும் தலித் ஏரியாவில்புகுந்து சராமாரியாகக் கற்களை வீசி எறிந்தனர். இந்த வன்முறையில், சரஸ்வதியம்மாளின் பக்கத்துவீட்டுக்காரர்களும் குழந்தைகளும் பலத்த காயமடைந்தனர்.
தொடர்ந்து, சரஸ்வதியம்மாள் வீட்டை முற்றுகையிட்ட பிரமலைக் கள்ளர்கள், அவரை வெளியே எங்கும் செல்லமுடியாமல் தடுத்து விட்டனர். நேற்று இரவிலிருந்தே அவர் வீட்டுக் காவலில்தான் உள்ளார். சரஸ்வதியம்மாளின்மருமகனான கருப்பசாமி உடனடியாகப் போலீசில் புகார் கொடுத்தும்கூட, போலீசார் இதுவரை எந்தவிதமானநடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதனால் பிரச்சனை விசுவரூபம் எடுத்துள்ளது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமிஇச்சம்பவத்திற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணை, அதுவும் தலித் இனத்தைச் சேர்ந்த ஒருபெண்ணை வீட்டுக் காவலில் வைத்துள்ளவர்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இவ்விஷயத்தில் தமிழக முதல்வர் நேரடியாகத் தலையிட்டு, சரஸ்வதியம்மாளை மீட்க வேண்டும் என்றும், அவரைவீட்டுக் காவலில் வைத்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சம்பந்தப்பட்ட 3 பஞ்சாயத்துத் தொகுதிகளிலும் தலித்துகள் யாரும் போட்டியிடக் கூடாது என்று பிரமலைக்கள்ளர்கள் வெளிப்படையாகக் கூறிய போதிலும், போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுகுற்றம் சாட்டினார் கிருஷ்ணசாமி.
வேட்புமனுத் தாக்கல் செய்யும் தலித்துகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவில்லை என்று மாநிலத் தேர்தல்கமிஷனையும், மாவட்ட நிர்வாகத்தையும் கடுமையாகக் கண்டித்த கிருஷ்ணசாமி, இந்த 3 பஞ்சாயத்துக்களைச்சேர்ந்த யாரும் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை என்றெல்லாம் வந்த தகவல்கள் பொய் என்றும் கூறினார்.
நேற்றிரவு நாட்ராமங்கலத்தில் ஏற்பட்ட வன்முறை காரணமாக அந்தக் கிராம மக்கள் அனைவருமே காலி செய்துவிட்டுப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த 3 பஞ்சாயத்துத் தொகுதிகளிலும் தேர்தலை நடத்த அரசு தவறினால், தானே வேட்புமனுக்களைப் பெற்றுக்கொண்டு, புதிய தமிழகமே முன்னின்று இந்தத் தேர்தலை நடத்தும் என்றும் கிருஷ்ணசாமி எச்சரிக்கைவிடுத்துள்ளார்.