நேர்மையைக் கொன்ற கள்ளச் சாராய வியாபாரிகள்
சென்னை:
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக சில சாராயவியாபாரிகள் செய்த சதியே புழல் கள்ளச்சாராய சாவுகள் என்று கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்துள்ள இரண்டு கள்ளச்சாராய சாவுகள் தமிழகத்தையே உலுக்கி விட்டன.முதலில் அம்பத்தூர்-ஆவடி பகுதியில் நடந்த சாவில் 15க்கும் மேற்பட்டோர் இறந்தனர். வெள்ளிக்கிழமை புழல்பகுதியில் விஷச்சாராயம் குடித்த 36 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் உயிருக்கு போராடி வருகின்றனர்.
இந்த விஷச்சாராய சாவுகளுக்குப் பின்னணியில் கள்ளச்சாராய வியாபாரிகள் சிலர் இருப்பதாக போலீஸ்வட்டாரத்திலேயே பேச்சு அடிபடுகிறது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தின் போலீஸ் எல்லைக்குள் இந்த இருபகுதிகளும் வருகின்றன. செங்கை கிழக்கு மாவட்ட எஸ்.பியாக பொன்.மாணிக்கவேலு இருக்கிறார்.
மிகுந்த கெடுபிடியான அதிகாரியான பொன்.மாணிக்கவேலுவால் கள்ளச்சாராய அதிபதிகள் தொழிலில்தொய்வடைந்து, நொந்து போயுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் 40க்கும் மேற்பட்ட கள்ளச்சாராயவியாபாரிகளை பொன்.மாணிக்கவேலு உத்தரவின் பேரில் போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், பலகள்ளச்சாராய தொழிற்கூடங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
கள்ளச்சாராய விற்பனை எங்கு நடந்தாலும் அங்கு தானே நேரடியாகச் சென்று அவற்றை ஒடுக்குவதுமாணிக்கவேலுவின் ஸ்டைல் ஆகும். இதனால் முன்பு மாதிரி சுதந்திரமாக தொழில் நடத்த முடியாமல் கள்ளச்சாராயவியாபாரிகள் தவித்து வந்தனர்.
இவர்களது தவிப்பைக் கண்டு, போலீஸ் துறையில் இருந்த சில போலீஸ் அதிகாரிகளும் தவிப்புக்குள்ளாகினர்.மாதந்தோறும் சுளையாக கிடைத்து வந்த பணம் கிடைக்காமல் போனதால், அவர்களும் மாணிக்கவேலு மீதுஅதிருப்தியில் இருந்தனர்.
இதையடுத்து அவரை இடமாற்றம் செய்வதற்கு அரசியல் ரீதியாக கள்ளச்சாராய வியாபாரிகள் முயற்சி செய்தனர்.ஆனால் அதிமுக தலைமையின் அசைக்க முடியாத நம்பிக்கையை மாணிக்கவேலு பெற்றிருந்ததால் அவரைஇடமாற்றம் செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தன.
இந்த நிலையில்தான் குறுக்கு வழியில் மாணிக்கவேலு பெயரைக் கெடுக்கும் முயற்சியில் கள்ளச்சாராயவியாபாரிகளும், சில போலீஸ் தலைகளும் முயன்றதாக கூறப்படுகிறது.
அதன் ஒரு பகுதியாகவே கள்ளச்சாராயத்தில் விஷத்தைக் கலந்து கொடுத்து அதன் மூலம் சாவுகள் ஏற்பட்டால் பழிமாணிக்கவேலு மீது விழும் என்று அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
புழல் பகுதியில் கள்ளச்சாராய ஒட்டு மொத்த விற்பனையை கன்னிகா என்ற கன்னியம்மாள் என்ற பெண்மணிதான்பார்த்து வருகிறார். இவரிடம் வாங்கித்தான் பிற வியாபாரிகள் கள்ளச்சாராயம் விற்பது வழக்கம். அப்படி வாங்கியகஸ்தூரி என்பவரிடமிருந்துதான் சாராய பாக்கெட்டுக்களை வாங்கிக் குடித்து 36 பேர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தன்று சாராயம் விற்றது, தான் அல்ல தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் என்று கன்னிகா போலீஸாரிடம்கூறியிருப்பதாகத் தெரிகிறது. எனவே இடையில் யாரோ மெத்தனால் என்ற விஷத் தன்மை கொண்டவேதிப்பொருளை கலந்து விட்டதாகத் தெரிகிறது. அதில் பிற கள்ளச்சாராய வியாபாரிகளின் கைவரிசைஇருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த புதிய தகவலையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக நடந்து வரும் சதி வேலைகள் குறித்துத் தெரிந்த காரணத்தினாலேயே அவர் மீது மட்டும்தமிழக டிஜிபி நடவடிக்கை எதற்கும் உத்தரவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் கள்ளச்சாராய புழக்கம் தமிழகம் முழுவதிலுமே அதிகரித்து விட்டது. போலீஸ் துறையில் உள்ள சிலஉயர் அதிகாரிகளே இதற்கு முழு ஆதரவாக இருப்பதால் கள்ளச்சாராய புழக்கத்தை ஒழிப்பது கடினமாக உள்ளது.
அரசு தீவிர நடவடிக்கை எடுத்து தவறு செய்யும் அதிகாரிகள் மீது பாரபட்சம் பார்க்காது கடும் நடவடிக்கைஎடுத்தால் மட்டுமே இந்த பரிதாபச் சாவுகளை எதிர்காலத்தில் தவிர்க்க முடியும் என்று பொதுமக்கள்எதிர்பார்க்கின்றனர்.