6 மாநகராட்சிகளிலும் 41 சதவிகிதம் மட்டுமே வாக்குப் பதிவு
சென்னை:
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி வாக்காளர்கள்தான் மிகவும் குறைந்த அளவில் ஓட்டுப்போட்டுள்ளனர். மாநகராட்சிப் பகுதிகளில் வெறும் 41 சதவீத வாக்குளே பதிவானது.
தமிழக தேர்தல் ஆணையர் பி.எஸ். பாண்டியன் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல் மற்றும் 2வது கட்ட வாக்குப் பதிவுகளில் 66.4 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் கிராமப்பஞ்சாயத்துக்களில் 72 சதவீத வாக்குகளும், பேரூராட்சிகளில் 64 சதவீத வாக்குகளும், நகராட்சிகளில் 55 சதவீதவாக்குகளும், மாநகராட்சிப் பகுதிகளில் 41 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
2வது கட்டத் தேர்தலில் பல்வேறு காரணங்களுக்காக 193 வாக்குச் சாவடிகளிலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட7 வாக்குச் சாவடிகளிலும் சனிக்கிழமை மறு வாக்குப் பதிவு நடக்கிறது.
வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை துவங்குகிறது. அன்று பிற்பகல் வாக்கில் முதலாவது முடிவுகள் வெளியாகத்தொடங்கும் என்றார் பாண்டியன்.