தேர்தல் வன்முறை: நடவடிக்கை எடுக்க தேர்தல் கமிஷனுக்கு கோர்ட் உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறைகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று மாநில தேர்தல் கமிஷனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் சூர்யபிரகாஷ் என்பவர் பொது நல மனு ஒன்றை இன்று (வெள்ளிக்கிழமை)தாக்கல் செய்தார். அவர் அம்மனுவில் கூறியிருப்பதாவது:
இரண்டு கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது, கள்ள ஓட்டுப் போடுதல், வாக்குச் சீட்டுகள் மற்றும்வாக்குப் பெட்டிகளைத் தூக்கிக் கொண்டு ஓடுதல், வாக்குச் சாவடியைக் கைப்பற்றுதல், வாக்காளர்கள் மற்றும்தேர்தல் அதிகாரிகளைத் தாக்குதல் உள்பட ஏராளமான வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன.
ஆனால், தேர்தல் கமிஷன் எதையுமே கண்டு கொள்ளவில்லை. இது முறையாகச் செயல்படாத காரணத்தினால்தான்பல அசம்பாவிதங்களும் அரங்கேறியுள்ளன.
ஆளுங்கட்சியினர் செய்த வன்முறைகளை போலீசாரும் கண்டு கொள்ளாமலேயே இருந்துள்ளனர். இதனால்அதிமுகவினர் வெகு தைரியமாக வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றி கள்ள ஓட்டும் போட்டுள்ளனர்.
எனவே இந்த உள்ளாட்சித் தேர்தலின்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து தேர்தல் கமிஷன்உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
மேலும், வாக்கு எண்ணிக்கையின் போதும் அசம்பாவிதங்கள் நடந்து விடாமல் இருக்கும் பொருட்டு, வாக்குஎண்ணிக்கை முழுவதையும் வீடியோ எடுப்பதற்கும் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி தலைமையிலான பெஞ்ச்,தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில தேர்தல்கமிஷனுக்கு உத்தரவிட்டது.