ஸ்டாலின் உள்பட 6 மேயர்கள் பதவியேற்பு
சென்னை:
சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஸ்டாலின் உள்பட தமிழகத்தின் 6மாநகராட்சிகளின் மேயர்களும் கவுன்சிலர்களும் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
சென்னை மேயர் ஸ்டாலின் அதிர்வேட்டுகள் முழங்க ஊர்வலமாக மாநகராட்சிக்கு அழைத்து வரப்பட்டார்.அவருக்கு சென்னை மாநகர முதன்னை செசன்ஸ் நீதிபதி அசோக்குமார் உறுதிமொழிப் பிரமாணம் செய்துவைத்தார்.
ஆனால், இந்த நிகழ்ச்சியை அதிமுக, த.மா.க. கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். பதவியேற்றுக் கொண்டபின்கவுன்சிலர்களுக்கு மேயர் உறுதிமொழிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், பா.ஜ.க. மாநிலப் பொதுச் செயலாளர் இல.கணேசன்,மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு ஆகியோர் கலந்து கொணடனர்.
சேலம்:
அதே போல சேலம் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக வேட்பாளர் சுரேஷ் குமார் இன்று பதவியேற்றார்.
நேரு கலையரங்கில் நடந்த நிகழ்ச்சியில் சேலம் மாநகர முதன்மை செசன்ஸ் நீதிபதி ராமலிங்கம் உறுதிமொழிப்பிரமாணம் செய்துவைத்தார். இதையடுத்து மேயர் பிற கவுன்சிலர்களுக்கு உறுதிமொழிப் பிரமாணம் செய்துவைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செம்மலை, தனபால், மாவட்ட ஆட்சியர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மதுரை:
மதுரை மேயராக வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் செ.ராமச்சந்திரன் பதவியேற்றுக் கொண்டார்.
மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி அவருக்கு உறுதிமொழிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் மேயர் பிறகவுன்சிலர்களுக்கு உறுதிமொழிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன், முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாவட்டஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெல்லை:
நெல்லை மாநகராட்சியின் மேயர் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ஜெயராணி இன்று மேயராகப்பதவியேற்றுக் கொண்டார்.
அவருக்கு மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி பானுமதி உறுதிமொழிப் பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில்அமைச்சர் நைனார் நாகேந்திரன், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் கவுன்சிலர்களுக்கு மேயர் ஜெயராணி உறுதிமொழிப் பிரமாணம் செய்து வைத்தார்.
கோவை:
கோவை மாநகராட்சி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவின் மலரவனும் இன்று பதவியேற்றுக் கொண்டார்.அவருக்கு மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி தணிகாசலம் உறுதிமொழிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர்அவர் கவுன்சிலர்களுக்கு உறுதிமொழிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் வேலுச்சாமி கலந்து கொண்டார்.
திருச்சி:
திருச்சி மேயராகத் தேர்வான த.மா.காவின் சாருபாலா தொண்டமானும் இன்று மேயராகப் பதவியேற்றுக்கொண்டார்.
அவருக்கு மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிபதி ஜெயபால் உறுதிமொழிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர்சாருபாலா கவுன்சிலர்களுக்கு உறுதிமொழிப் பிரமாணம் செய்து வைத்தார்.