பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிரானதா "பொடோ"?
டெல்லி:
தீவிரவாத தடுப்புச் சட்டமான "பொடா"வில் பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளசட்டப்பிரிவுகளை நீக்க வேண்டும் என்று இந்திய பத்திரிக்கை ஆசிரியர்கள் கூட்டமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது.
தீவிரவாத தடுப்புச் சட்டம் என்ற புதிய சட்டத்தை தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்தச்சட்டம் குறித்த விவாதம் பாராளுமன்றத்தில் வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில் இந்தச் சட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் சுதந்திரத்தைப் பாதிக்கும் வகையில் உள்ளசட்டப்பிரிவுகளை நீக்கவோ அல்லது திருத்தவோ மத்திய அர சு நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்தியபத்திரிக்கை ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து டெல்லியில் நேற்று (திங்கள்கிழமை) அந்த அமைப்பின் தலைவர் மேமன் மாத்யூ மற்றும் செயலாளர்அலோக் மேத்தா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தில் பத்திரிக்கையாளர்கள் பற்றிக் கூறப்பட்டுள்ள சட்டப்பிரிவுகளில்,பத்திரிக்கையாளர்கள் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புள்ளவர்களைப் பேட்டி எடுக்கச் சென்றால் அதன் முழுவிவரத்தையும் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தீவிரவாதிகள் அளித்த செய்திகளின்முழுவிவரத்தையும் காவல்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதுபோல தீவிவாதிகளைச் சந்திக்க முற்படும் பத்திரிக்கையாளர்களை கைது செய்யவும் அந்தச் சட்டத்தில்இடமளிக்கப்பட்டுள்ளது.
இது பத்திரிக்கையாளர்களின் சுதந்திரம் குறித்து ஏற்கனவே இயற்றப்பட்டுள்ள சட்டத்தை மீறுவதாக உள்ளது.எனவே இந்தச் சட்டம் குறித்து மத்திய அரசும் பாராளுமன்றமும் மீண்டும் பரிசீலித்து, அதை நீக்கவோ அல்லதுதிருத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பத்திரிக்கைத் துறைக்கு எதிராக இயற்றப்பட்டுள்ள இந்தச் சட்டம் குறித்து மத்திய அரசு எங்களைக்கலந்தாலோசிக்காதது அதிர்ச்சியை அளிக்கிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.