திமுக மட்டும் கூட்டணி ஆட்சினு சொல்லிருந்தால் நடப்பதே வேற.. திருமாவளவன் மீண்டும் ட்விஸ்ட்
சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணி உடைந்துவிட்டது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டன. தவெக, திமுக கூட்டணி விவகாரத்தில் விசிக தலைவர் திருமாவளவன் மாறுபட்ட கருத்துகளை கூறி வருவதாக விமர்சனம் எழுந்துள்ளது. திமுக மட்டும் கூட்டணி ஆட்சிக்கு தயார் என்று, கூட்டணிகள் விரும்பிய இடத்தை கொடுத்திருந்தால் இப்படி நடந்திருக்காது என திமுகவை விமர்சித்துள்ளார்.
விசிகவின் பொதுக் கூட்டத்தில் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் திருமாவளவன், "கூட்டணி கட்சியினர் துரோகம் செய்துவிட்டனர் என்று திமுகவினர் சொல்லி வருகிறார்கள். துரோகம் செய்ய என்ன தேவை இருக்கிறது. நாளைக்கு கூட அமைச்சர் பதவியில் இருந்து நாம் வெளியேற முடியும். அதைத்தான் நான் சொன்னேன். அதில் எங்களுக்கு பெரிய பிடிப்பு இல்லை என்பதற்காக சொல்கிறேன். உடனே இருக்கிற இடத்தில் விசுவாசமாக இருங்கள் என்று நம்மை அடிமையாக வைத்திருக்க பார்க்கிறார்கள்.

தவெக ஆதரவு
சுதந்திரமாக சிந்திக்கும் ஆளாக பார்க்கவில்லை. இங்கே இருந்தால் இங்கே விசுவாசமாக இரு. அங்கே இருந்தால் அங்கே விசுவாசமாக இரு என்கிறார்கள். அதற்கு நீ சுதந்திரமாக சிந்திக்க கூடாது, சுதந்திரமாக முடிவு எடுக்க கூடாது என்பது தான் பொருள். இது என்ன போக்கு இது. பதவி தான் முக்கியம் என்றால் அதை தக்க வைப்பதற்கான அணுகுமுறையை தானே யாரும் எடுப்பார்கள். நாங்கள் தவெகவுக்கு சப்போர்ட் செய்துவிட்டோம், அமைச்சரவையில் இடம் பெற்றுவிட்டோம்.
இனிமேல் தவெக தலைவரை, கட்சியை புகழ்ந்து பாடி கொண்டே இருப்போம் என்கிற முடிவை தானே சராசரி மனிதர் முடிவு செய்வார். ஆனால் அதை தாண்டி பாஜகவுக்கு எதிராக எல்லா கட்சிகளும் இங்கே இயங்க வேண்டும் என்கிற பார்வையை திருமாவளவன் முன் வைக்கிறார் என்றால் இதை நீங்கள் பாராட்ட வேண்டாமா. வரவேற்க வேண்டாமா. இணக்கமாக இல்லாமல் இவன் ஏன் அப்படி பேசுகிறான் என்றால் மறுபடியும் திமுகவுடன் ஒட்டி கொள்வார் என நினைக்கிறார்கள். திமுகவுடன் ஏன் ஒட்டி கொள்ள வேண்டிய தேவை ஏன் வந்தது.
திமுக கூட்டணி
இது அர்த்தமில்லாத விமர்சனம். கூட்டணி ஆட்சிக்கு திமுக தயார் என்று அறிவித்திருந்தால், கூட்டணி கட்சிகளின் உணர்வுகளை மதித்து அவர்கள் விரும்பிய எண்ணிக்கையை ஓரளவுக்காவது திருப்திகரமாக தந்திருந்தால், விரும்பிய தொகுதிகளை தந்திருந்தால் இவ்வளவு பெரிய பின்னடைவை சந்தித்திருக்க வாய்ப்பில்லை. அதைவிட இந்த கூட்டணி கட்சிகள் அவ்வளவு வேகமாக வெளியேறியிருக்க வாய்ப்பிப்லை.இந்த கோணத்தில் யாரும் சிந்திக்கவில்லை" என்று கோபமாக பேசினார்.












Click it and Unblock the Notifications