அண்ணா சாலை மேம்பாலப் பணிகள் திடீர் முடக்கம்? தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை பால பணிகளில் சிக்கல்?
சென்னை: சென்னையின் மிக முக்கிய சாலையாக விளங்கும் அண்ணா சாலையில், வாகன நெரிசலைக் குறைப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட தேனாம்பேட்டை - சைதாப்பேட்டை மேம்பாலப் பணிகள் கடந்த சில வாரங்களாகக் கடுமையான மந்தநிலையைச் சந்தித்து வருகின்றன. பணிகள் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டதாக சொல்லும் அளவிற்கு மிக மெதுவாக பால பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த ஜூன் மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த இப்பணிகள், தற்போது வெறும் 70 விழுக்காடு மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும், பாலம் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வர இன்னும் ஓராண்டு காலம் வரை ஆகலாம் என்றும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அண்ணா சாலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தினசரி பயணிக்கும் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
திட்டத்தின் தற்போதைய நிலை
ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3.20 கிலோமீட்டர் நீளத்திற்கு நான்கு வழிப் பாதையாக இந்த மேம்பாலம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. எல்டாம்ஸ் சாலை, நந்தனம், சி.ஐ.டி நகர் உள்ளிட்ட 7 முக்கிய போக்குவரத்து சந்திப்புகளைத் தடையின்றி கடக்கும் வகையில் இந்த இரும்பு மற்றும் கான்கிரீட் கலவை பாலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நந்தனம் மற்றும் சைதாப்பேட்டை வரையிலான தூரங்களில் தூண்கள் அமைக்கும் பணிகள் ஓரளவுக்கு முடிவடைந்திருந்தாலும், தேனாம்பேட்டை அருகே பணிகள் மிக மோசமான தொய்வைச் சந்தித்துள்ளன.
பணிகள் மெதுவாக நடக்கக் காரணங்கள் என்ன?
நெடுஞ்சாலைத் துறை மற்றும் ஒப்பந்த நிறுவனங்களின் தரப்பில் விசாரித்தபோது, இந்தப் பணிகள் மெதுவாக நடப்பதற்குப் பின்னால் பல்வேறு தொழில்நுட்ப மற்றும் நிர்வாகக் காரணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது:
இந்த மேம்பாலம் அமைவதிலேயே மிகப் பெரிய சவால், இதன் பெரும்பகுதி தரைக்கு அடியில் செல்லும் சென்னை மெட்ரோ ரயிலின் சுரங்கப் பாதைகளுக்கு மேல் அமைவதுதான். மெட்ரோ கட்டமைப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வண்ணம், மிகக் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி மட்டுமே தூண்களை நிறுவ முடிகிறது.
அண்ணா சாலையின் பூமிக்கடியில் செல்லும் 230kV உயர் அழுத்த மின்சாரக் கேபிள்கள், முக்கிய குடிநீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் இணைப்புகளை மாற்றி அமைப்பதில் தொடர் முட்டுக்கட்டைகள் நீடித்து வருகின்றன.
சமீபத்திய தேர்தல் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்றதால் ஏற்பட்ட ஆள் பற்றாக்குறை காரணமாக, பாலத்திற்கான இரும்பு உதிரிபாகங்களை அமைக்கும் வேகம் கணிசமாகக் குறைந்தது.
சாலை பணிகள் இரவு நேரங்களில் மட்டுமே நடக்கிறது
பகல் நேரங்களில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுவதால், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மட்டுமே கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடிகிறது.
பாலம் பணிகளுக்காக நந்தனம் மற்றும் தேனாம்பேட்டை சந்திப்புகளில் நீண்ட நாட்களாகப் போடப்பட்டுள்ள தற்காலிகப் போக்குவரத்து மாற்றங்கள், மாற்றுப் பாதைகளான தி நகர் தியாகராய சாலை மற்றும் செனோடாப் சாலைகளில் கடுமையான நெரிசல்களை உருவாக்கியுள்ளன.
பேருந்துகளும், கனரக வாகனங்களும் குறுகிய மாற்றுப் பாதைகளில் திணறுவதால், அலுவலக நேரங்களில் வாகனங்கள் கிலோமீட்டர் கணக்கில் அணிவகுத்து நிற்கின்றன. மழைக்காலம் நெருங்கி வரும் வேளையில், தற்காலிக தடுப்புகளால் சாலைகளின் அகலம் குறைந்துள்ளதால் விபத்து அபாயமும் அதிகரித்துள்ளது.














Click it and Unblock the Notifications