அலறும் மத்திய கிழக்கு.. அமெரிக்காவால் கத்தார் + UAE + பஹ்ரைன் + குவைத்தை குறிவைத்து தாக்கும் ஈரான்
டெஹ்ரான்: அமெரிக்கா - ஈரான் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதலை தொடங்கி உள்ள நிலையில் ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளது. அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ள பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் குவைத்தை நோக்கி ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தி வருவதால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சமடைந்துள்ளது.

ஈரானுக்கும், அமெரிக்காவிற்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இருநாடுகள் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் கடந்த வாரம் முதல் மீண்டும் மோதல் தொடங்கியது. இந்நிலையில் தான் ஹார்முஸ் ஜலசந்தியில் 'சைப்ரஸ்' நாட்டின் கொடியுடன் பயணித்த எம்/வி ஜிஎஃப்எஸ் கேலக்ஸி எனும் கண்டெய்னர் கப்பல் மீது நேற்று ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் மீது நேற்று அமெரிக்காவின் படைகள் தாக்குதல் நடத்தின. நேற்று இரவு அமெரிக்கா சார்பில் ஈரான் மீது இந்த வாரத்தில் 3வது தாக்குதல் தொடங்கியது. இதனால் ஈரான் கடும் கோபமடைந்தது. அமெரிக்காவிற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரானின் புரட்சிகர காவல் படை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதுமட்டுமின்றி ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் மூடியதோடு, அமெரிக்காவின் ராணுவ தளங்கள் உள்ள நாடுகளை நோக்கி ஈரான் இன்று தாக்குதலை தொடங்கியது. ஈரானின் அருகே உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகளான கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளை நோக்கி ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானின் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்து கொள்ள வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை அனைத்து நாடுகளும் பயன்படுத்தி ஏவுகணை, ட்ரோன்களை செயலிழக்க செய்து வருகின்றன. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் மீண்டும் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு துறை அமைச்சகம் கூறுகையில், ''எங்கள் நாட்டை தாக்க வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் ஆகியவற்றை தடுக்கும் பணியில் வான்வெளி பாதுகாப்பு அமைப்பு ஈடுபட்டு வருகிறது. அண்டை நாடான பஹ்ரைனிலும் வான்வெளி தாக்குதலை எச்சரிக்கும் ஒலி எழுப்பப்பட்டுள்ளது'' என்றார்.
அதேபோல் கத்தாரிலும் முழு அலர்ட் செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் வெடிப்பு தொடர்பான சத்தங்கள் கேட்கப்பட்டுள்ளது. மேலும் குவைத் நாட்டிலும் ராணுவம் உஷார் நிலையில் உள்ளது. நாட்டுக்குள் வரும் ஏவுகணைகளை இடைமறித்து தற்காக்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
பஹ்ரைன் உள்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சகம் சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைய வேண்டும் என்று அறிவுரை வழங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications