உங்களுக்கு பிரபல பாடகி! ஆனால் எனக்கு பாட்டி! அதனால்.. எஸ்.ஜானகி பேத்தி அப்சரா உருக்கம்
பெங்களூர்: எங்கள் பாட்டியின் இறுதிச் சடங்கு, குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பங்கேற்கும் தனிப்பட்ட நிகழ்வாகவே இருக்க வேண்டும், தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் என பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் பேத்தி அப்சரா கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: எனது பாட்டியும் பிரபல பின்னணி பாடகியுமான எஸ்.ஜானகி மறைவுச் செய்தியை நான் மிகுந்த மனவேதனையுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். குடும்பத்தினர் வாரி வழங்கிய அன்புக்கு மத்தியில் எங்கள் பாட்டி அமைதியான முறையில் இந்த உலகை விட்டு பிரிந்து சென்றார்.

பாட்டியின் இறப்பால் நாங்கள் அனைவரும் மிகவும் உடைந்து போயுள்ளோம். அவர் வாழ்ந்த அசாதாரண வாழ்க்கைக்காகவும் காலத்தால் அழியாத இசையின் மூலம் மக்கள் மனதை கொள்ளை கொண்ட மகிழ்ச்சிக்காகவும் நாங்கள் அனைவருக்கும் நன்றியுடன் இருக்கிறோம்.
இந்த உலகிற்கு வேண்டுமானால் அவரது தனித்துவமான குரல் ஏராளமான எண்ணற்ற நினைவுகளை தரலாம். ஆனால் எங்களை பொருத்தமட்டில் அவர் எங்களிடம் பாசம், பரிவு, கருணை காட்டிய அன்பான பாட்டி. அவரது நினைவுகள் எப்போதும் எங்களுடன் இருக்கும்.
மேலும் இந்த சொல்லொண்ணா துயரத்தில் இருந்து மீண்டு வர எங்கள் குடும்பத்தினரின் தனிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். எங்கள் பாட்டி உடல்நல பாதிப்பால் அவதியுற்ற போது உறுதுணையாக இருந்தவர்கள், பிரார்த்தனைகள் செய்தவர்கள், எங்கள் நலம்விரும்பி ஆகியோருக்கு நன்றிகள்! உங்கள் அன்புக்கு நன்றி என அப்சரா குறிப்பிட்டுள்ளார்.
48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகி நேற்று திடீர் உடல்நல பாதிப்பு காரணமாக மைசூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நிறைய முறை மாரடைப்பு ஏற்பட்டதில் அவரது உயிர் பிரிந்தது.
எஸ்.ஜானகியின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவரது இறுதிச் சடங்கு இன்று மைசூரில் நடைபெறுகிறது. முன்னதாக அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மகாராஜா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
பின்னர் மாலை 4 மணி அளவில் அவரது பண்ணை வீட்டில் அவரது விருப்பப்படி உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. எஸ் ஜானகியின் மறைவுக்கு முதல்வர் விஜய் தனது இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியத் திரையிசை உலகில் தனது தனித்துவமான குரலால் பல தலைமுறைகளின் இதயங்களை வென்ற பழம்பெரும் பின்னணிப் பாடகி திருமதி எஸ். ஜானகி அவர்களின் மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, இசை உலகில் அழியாத முத்திரையைப் பதித்தவர். பலமுறை தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எண்ணற்ற உயரிய விருதுகளைப் பெற்ற அவர், தனது இனிமையான குரல், உணர்வுகளை வெளிப்படுத்தும் அபார திறன் மற்றும் இசைக்கான அர்ப்பணிப்பால் ரசிகர்களின் மனங்களில் என்றும் நிலைத்திருப்பார்.
அவரது மறைவு இந்திய இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், திரையுலகினர், இசைக் கலைஞர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார். அது போல் ரஜினி தனது இரங்கலில், தன்னுடைய தேனமுதக் குரலால் தலைமுறை தலைமுறையாக மக்களை மகிழ்வித்த ஜானகி அம்மா அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன் தனது பதிவில் பாடல் என்றும் ஒலித்துக்கொண்டே இருக்கும். அந்த அன்பை எங்கு தேடுவேன் அம்மா? இறக்கி வைக்கமுடியாத சோகம் பலர்க்கும் இருக்கும். அவர்க்கெல்லாம் ஆழ்ந்த இரங்கல்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.














Click it and Unblock the Notifications