அப்பாவி மக்கள் மீது தாக்குதல்: அமெரிக்கா மீது கருணாநிதி வருத்தம்
சென்னை:
ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்திவரும் அமெரிக்கா அப்பாவி மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதுகுறித்து திமுக தலைவர் கருணாநிதி வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:
கடந்த 7ம் தேதி முதல் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா போர் தொடுத்து வருகிறது. தீவிரவாதத்திற்கு எதிரானபோரில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.
பல அப்பாவி குழந்தைகளும் அமெரிக்காவின் குண்டு வீச்சுக்கு பலியானதை நாம் காண்கிறோம். அந்தகுழந்தைகள் முஸ்லீமா அல்லது கிறிஸ்தவர்களா என்று தெரியாது. அவர்கள் ஒரு பாவமும் செய்யாத அப்பாவிகள்.அவர்கள் இறந்துள்ளது வேதனையளிக்கிறது.
குண்டுக்கு முஸ்லிம், கிறிஸ்தவர் என்ற வேறுபாடு தெரியாது. எனவே அமெரிக்கா அப்பாவி மக்கள் மீது தாக்குதல்நடத்தப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார் கருணாநிதி.